தும்மலை அடக்குவது அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்!
தும்மல் வரும்போது அதை அடக்கிக்கொள்வது பலரின் இயல்பு. அவ்வாறு செய்ய வேண்டாம் என்று ஏன் மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்?
தும்மல் வரும்போது அதை அடக்கிக்கொள்வது பலரின் இயல்பு.
ஆனால் அவ்வாறு செய்வதால் தொண்டை, செவிச்சவ்வு, மூளையில் உள்ள இரத்தக்குழாய் ஆகியவற்றில் வெடிப்பு ஏற்படலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
தும்மலை அடக்கியதால் பெரும் அவதிக்கு ஆளானார், இங்கிலாந்தைச் சேர்ந்த 34 வயது ஆடவர் ஒருவர்.
தும்மலை அடக்க முயன்ற பிறகு, கழுத்தில் வெடிப்பு போன்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டது.
வீங்கிய கழுத்துடன், வலியுடன் அவர் மருத்துவமனையின் அவசரச் சேவை பிரிவைச் சென்றடைந்தார்.
தும்மலை அடக்க முயன்றபோது ஏற்பட்ட அழுத்தத்தால் தொண்டையின் பின் பகுதியில் வெடிப்பு ஏற்பட்டிருந்ததை மருத்துவப் பரிசோதனை காட்டியது.
பேசவோ, விழுங்கவோ முடியாத நிலையில் அந்த ஆடவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவருக்குக் குழாய் வழியாக உணவு அளிக்கப்பட்டது.
கழுத்து வலியும் வீக்கமும் குறையும் வரை அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஒரு வாரத்துக்குப் பிறகு அவர் வீடு திரும்பினார்.