200 பில்லியன் டாலர் மதிப்புமிக்க சீனப் பொருட்களுக்குப் புதிதாக 10 விழுக்காட்டு வரி விதிக்கப்போவதாக அதிபர் டிரம்ப் அச்சுறுத்தல்
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், 200 பில்லியன் டாலர் மதிப்புமிக்க சீனப் பொருட்களுக்குப் புதிதாக 10 விழுக்காட்டு வரி விதிக்கப்போவதாக அச்சுறுத்தியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், 200 பில்லியன் டாலர் மதிப்புமிக்க சீனப் பொருட்களுக்குப் புதிதாக 10 விழுக்காட்டு வரி விதிக்கப்போவதாக அச்சுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே அமெரிக்கா சீன இறக்குமதிகளுக்கு வரி விதித்ததையடுத்து, சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கு அதே அளவு வரியை விதித்தது.
பெய்ச்சிங் அமெரிக்கப் பொருட்களுக்கான வரியை அதிகப்படுத்துவது ஏற்றுக்கொள்ளப்படமுடியாத நடவடிக்கை என்றார் திரு. டிரம்ப்.
அதற்கான தண்டனையாக மேலும் சில இறக்குமதிகளுக்குப் புதிய வரிகளை விதிக்கத் திட்டமிடுவதாக அவர் கூறினார்.
அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் நியாயமானவையாக இருக்கவேண்டும் என்று திரு. டிரம்ப் குறிப்பிட்டார்.
சீன அதிபர் ஸி ஜின்பிங்குடன் தமக்கு உன்னதமான உறவு இருப்பதாகக் கூறிய அமெரிக்க அதிபர், தாங்கள் இருவரும் தொடர்ந்து பல்வேறு அம்சங்கள் குறித்து இணைந்து பணியாற்றவிருப்பதாய்த் தெரிவித்தார்.
இருப்பினும், சீனாவோ, மற்ற நாடுகளோ, வர்த்தக ரீதியாக அமெரிக்காவை நியாயமற்ற முறையில் இனி நடத்தமுடியாது என்றார் அவர்.
உலகின் இரு பெரும் பொருளியல்களுக்கு இடையிலான பதற்றம், வர்த்தகப் போர் மூளக் காரணமாகக்கூடும் என்ற அச்சம் நிலவும்வேளையில் அமெரிக்க அதிபரின் அண்மை அறிவிப்பு வெளியானது.