10 மேற்கத்திய நாட்டுத் தூதர்களை வெளியேற்றப்போவதாகத் துருக்கி எச்சரிக்கை
துருக்கி, 10 மேற்கத்திய நாடுகளின் தூதர்களை வெளியேற்றப்போவதாக எச்சரித்துள்ளது.
துருக்கி, 10 மேற்கத்திய நாடுகளின் தூதர்களை வெளியேற்றப்போவதாக எச்சரித்துள்ளது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள தொழிலதிபரும் கொடைவள்ளலுமான ஒஸ்மான் கவாலா (Osman Kavala) விடுதலை செய்யப்படவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, துருக்கி அந்த எச்சரிக்கையை விடுத்தது.
துருக்கி எவ்வாறு செயல்படவேண்டும் என உத்தரவிட யாருக்கும் உரிமையில்லை எனத் துருக்கிய அதிபர் ரேஜிப் தயிப் எர்டுவான் (Rejep Tayyip Erdogan) கூறினார்.
அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த தூதர்களைக் குறிவைத்து அவர் பேசினார்.
அவர்களுக்குரிய அரசதந்திர ரீதியான சில சலுகைகளை நீக்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் துருக்கிய அதிபர், வெளியுறவு அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கைது நடவடிக்கை, சட்ட நடவடிக்கை போன்றவற்றிலிருந்து அந்தத் தூதர்களுக்கு இனி விலக்கு அளிக்கப்படமாட்டாது எனக் கூறப்படுகிறது.
ஆனால், அவர்கள் எப்போது வெளியேற்றப்படுவார்கள் என்பதுபற்றித் தகவல் இல்லை.
உண்மையிலேயே துருக்கியில் இருந்து வெளியேற்றப்படுவார்களா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.
தொழிலதிபர் கவாலா கடந்த சுமார் 4 ஆண்டாகச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
துருக்கிய அரசாங்கத்தைக் கவிழ்க்க முயன்றதாக அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
ஆனால் அந்தக் குற்றச்சாட்டுகளை அவர் மறுத்து வருகிறார்.
திரு. கவாலா விவகாரத்துக்குத் துரிதமான, நியாயமான முறையில் தீர்வுகாணப்படவேண்டும் எனத் தூதர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.