அதிபர் டிரம்ப்பின் கணக்கைத் தடை செய்தது சரியான முடிவே. ஆனால், அது ஆபத்தான முன்மாதிரி-Twitter
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் கணக்கைத் தடை செய்தது சரியான முடிவே என்றபோதும் அது ஆபத்தான முன்-மாதிரி என Twitter நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேக் டோர்சி (Jack Dorsey) தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் கணக்கைத் தடை செய்தது சரியான முடிவே என்றபோதும் அது ஆபத்தான முன்-மாதிரி என Twitter நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேக் டோர்சி (Jack Dorsey) தெரிவித்துள்ளார்.
உலகளாவிய பொது உரையாடலைக் கட்டுப்படுத்துவதில் தனி நபருக்கு அல்லது தனி நிறுவனத்திற்கு உள்ள அதிகாரத்தை அது வெளிப்படுத்துவதாக அவர் சொன்னார்.
"ஒரு கணக்கைத் தடை செய்யும்போது வலுவான விளைவுகள் ஏற்படுகின்றன. அதற்கு சில தெளிவான விதிவிலக்குகள் உள்ளன. இருப்பினும் கணக்குகளைத் தடை செய்வது, ஆரோக்கியமான உரையாடலை ஊக்குவிப்பதற்கான எங்கள் நோக்கம் தோல்வி அடைந்ததைக் குறிக்கிறது."
திரு. டிரம்ப், கடந்த வாரம், அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தை நோக்கி அணிவகுத்துச் செல்லும்படித் தமது ஆதரவாளர்களைக் கேட்டுக்கொண்டிருந்தார்.
ஆகவே, பின்னர் அங்கு நேர்ந்த கலவரத்துக்கு அவரே காரணம் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.
அதனை அடுத்து, Twitter, அதிபரின் கணக்கை நிரந்தரமாகத் தடை செய்தது.
மற்ற சில சமூக ஊடகங்களும், அவரது கணக்குகளுக்கு தடை விதித்தன.
இருப்பினும், அச்செயல் நீண்ட காலத்தில், பேச்சு சுதந்திரத்திற்குப் பெயர் பெற்ற இணையத்தின் நோக்கத்திற்கு ஆபத்து விளைவிக்கும் என்றார் திரு. டோர்சி.
முன்னதாக, அமெரிக்கக் குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், சமூக ஊடகங்களின் தடையைக் குறைகூறியிருந்தனர்.
அதிபரின் பேச்சு சுதந்திரத்தை அந்தத் தடை கீழறுப்பதாக அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
ஜெர்மானியப் பிரதமர் ஏங்கலா மெர்க்கலும் அந்தத் தடையைக் குறைகூறியிருந்தார்.
பேச்சு சுதந்திரத்திற்குத் தடை விதிப்பது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் முடிவாக இருக்கவேண்டுமே தவிர, தனியார் நிறுவனங்களிடம் அந்த அதிகாரம் இருக்கக்கூடாது என அவர் தமது பேச்சாளர் மூலம் எச்சரித்திருந்தார்.