கிருமிப்பரவலை முடிவுக்குக் கொண்டு வர, பணக்கார நாடுகள் இன்னும் அதிகமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் : Unicef
கொரோனா கிருமிப்பரவலை முடிவுக்குக் கொண்டு வர விரும்பினால், பணக்கார நாடுகள் இன்னும் அதிகமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று Unicef எனும் ஐக்கிய நாட்டு நிறுவன சிறார் நிதியம் தெரிவித்துள்ளது.
கொரோனா கிருமிப்பரவலை முடிவுக்குக் கொண்டு வர விரும்பினால், பணக்கார நாடுகள் இன்னும் அதிகமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று Unicef எனும் ஐக்கிய நாட்டு நிறுவன சிறார் நிதியம் தெரிவித்துள்ளது.
தேவைக்கு அதிகமான தடுப்பூசிகளைப் பணக்கார நாடுகள் நன்கொடை வழங்குவது மட்டும் போதாது, இன்னும் பல அம்சங்களிலும் அவை கவனம் செலுத்த வேண்டும் என்று நிதியத்தின் தடுப்பூசிப் பிரிவுத் தலைவர் லிலி கெப்ரனி (Lily Caprani) கூறினார்.
G7 நாடுகளின் சந்திப்பு நிறைவடையும்போது, விரிவான திட்டம் குறித்துத் தலைவர்கள் அறிவிக்க வேண்டும் என்றார் அவர்.
வளரும் நாடுகளுக்கு நிதியும், தளவாட உதவிகளும் தேவை என்று பொதுச் சுகாதாரக் குழுக்களும், மனிதநேய நிவாரணக் குழுக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளன.
வளரும் நாடுகளுக்குத் தடுப்பூசி நன்கொடை வழங்குவதாக G7 தலைவர்கள் அறிவித்த பிறகு அந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
G7 நாடுகளின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதிப் பேர் ஒருமுறையாவது தடுப்பூசி போட்டுள்ளனர்.
உலக அளவில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் விகிதம் 13 விழுக்காடு. ஆனால், ஆப்பிரிக்காவில் அந்த விகிதம் 2.2 விழுக்காடு மட்டுமே என்பதை நிபுணர்கள் சுட்டுகின்றனர்.
-AP