காவல்துறைக் கட்டுப்பாட்டில் இருந்தபோது உயிரிழந்த கறுப்பின ஆடவர் - அமெரிக்கா முழுவதும் வெடிக்கும் வன்முறை
அமெரிக்காவில், காவல்துறைக் கட்டுப்பாட்டில் இருந்தபோது உயிரிழந்த கறுப்பின ஆடவர் ஜார்ஜ் ஃபுளோய்டின் (George Floyd) மரணத்துக்குக் கண்டனம் தெரிவித்துப் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துவருகின்றன.
அமெரிக்காவில், காவல்துறைக் கட்டுப்பாட்டில் இருந்தபோது உயிரிழந்த கறுப்பின ஆடவர் ஜார்ஜ் ஃபுளோய்டின் (George Floyd) மரணத்துக்குக் கண்டனம் தெரிவித்துப் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துவருகின்றன.
கடந்த திங்கட்கிழமை நடந்த சம்பவத்துக்கு நியாயம் கேட்டு, வெள்ளை மாளிகைக்கு வெளியில் அமைந்துள்ள Lafayette பூங்காவில் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டங்களையடுத்து முடக்கப்பட்டிருந்த வெள்ளை மாளிகையின் பகுதி, மீண்டும் திறந்துவிடப்பட்டது.
இந்நிலையில், ஜார்ஜியா(Georgia) மாநிலத் தலைநகர் அட்லாண்ட்டாவில் (Atlanta) உள்ள CNN தலைமையகத்துக்கு வெளியே காவல்துறையினர் கூடியிருந்த வேளையில் ஆர்ப்பாட்டக்காரர்களும் அங்கு திரண்டனர்.
சினம் கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் தலைமையகக் கட்டடத்தின் வெளிப்புறத்தையும், காவல்துறை வாகனங்களையும் சேதப்படுத்தினர்.
அட்லாண்ட்டாவின் சில பகுதிகளில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது.
நியூயார்க் நகரில், ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறையினருடன் மோதினர். அதில் காவல்துறையின் வாகனங்களுக்குத் தீ மூட்டப்பட்டன.
அதிகாரிகள் சிலர் காயமடைந்தனர்.
டாலஸில், அதிகாரிகள் மீது கற்கள் வீசி எறியப்பட்டன. காவல் அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்த, கண்ணீர்ப் புகையைப் பயன்படுத்தவேண்டியிருந்தது.
லாஸ் ஏஞ்சலிஸிலும் (Los Angeles), ஓக்லந்திலும் (Oakland), ஆர்ப்பாட்டக்கார்கள் சாலைகளை முடக்கினர்.
கறுப்பின ஆடவர் புளோய்டின் கழுத்தில் முழங்காலால் அழுத்தியதாக நம்பப்படும் காவல்துறை அதிகாரி டெரெக் சாவ்வின் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.