அமெரிக்கா: 5 நாட்களுக்குப் பிறகு சுரங்கத்திலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட மூவர்
அமெரிக்காவில் கைவிடப்பட்ட நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் சிக்கிய மூவர், 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் கைவிடப்பட்ட நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் சிக்கிய மூவர், 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
வெஸ்ட் வெர்ஜீனியா மாநிலத்தின் வைட்ஸ்வில் (Whitesville) நகரத்தில் அமைந்துள்ள அந்தச் சுரங்கத்தில் இறங்கிய நால்வர் கடந்த சனிக்கிழமை இரவிலிருந்து காணாமற்போனதாகக் கூறப்பட்டது.
அவர்களது வாகனம் குகைக்கு அருகே இருந்தது.
இரு நாட்களுக்குப் பிறகு, குழுவைச் சேர்ந்த ஒருவர், காரிருள் குகையிலிருந்து எப்படியோ வெளிவந்தார்.
புதன்கிழமை இரவுக்குள் மற்ற மூவரை மீட்புப் பணியாளர்கள் கண்டுபிடித்துக் காப்பாற்றினர். சிகிச்சைக்காக அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
21 வயதுக்கும் 43 வயதுக்கும் இடைப்பட்ட அந்த நால்வர், செம்புக் கம்பிகளைத் தேடி குகைக்குள் புகுந்ததாகக் குடும்பத்தினர் கூறினர்.
செம்புக் கம்பிகளை விற்றுக் கணிசமான பணம் ஈட்டலாம் என்பதால், ஆபத்தைப் பொருட்படுத்தாமல் சிலர் அதைக் களவாட முயற்சி செய்வதாகச் சொல்லப்படுகிறது.
நாளொன்றுக்கு 1,000 டாலர் வரை ஈட்டமுடியுமாம்.
ஆனால் 4,000 அடி ஆழத்தில் இருந்த இந்த மூவரைக் காப்பாற்ற ஆன செலவோ சுமார் 1 மில்லியன் டாலர்!