கரியமில வாயு வெளியேற்றத்துக்கு வரி விதிக்கும் கொள்கை, கவனமாக மதிப்பீடு செய்யப்படுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கோரிக்கை
சிங்கப்பூரில், கரியமில வாயு வெளியேற்றத்துக்கு வரி விதிக்கும் கொள்கை, கவனமாக மதிப்பீடு செய்யப்படுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அழைப்பு விடுத்துள்ளனர்.
வெப்ப வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் அதேவேளையில், நிறுவனங்கள் பசுமைப் பொருளியலுக்குச் சுமுகமாக மாறத் தேவையான அவகாசமும் கொடுக்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
சிங்கப்பூர், கரியமில வாயு வெளியேற்றம் குறைந்த சமுதாயமாக மாறுவதுகுறித்த விவாதத்தின்போது, மன்ற உறுப்பினர்கள் சுமார் 20 பேர் அதுபற்றிப் பேசினர்.
கரிம வரியை உயர்த்துவதுபற்றி, இவ்வாண்டு வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்படவுள்ளது.
அந்த வரி உயர்வு, எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்பதில் அரசாங்கம் வெளிப்படையாக இருப்பது முக்கியம் என, புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதி உறுப்பினர் லியாங் எங் ஹுவா கேட்டுக்கொண்டார்.
சில நிறுவனங்களால், அந்த வரி உயர்வைச் சமாளிக்க முடியாமல்போகும் சாத்தியத்தை மறுப்பதற்கில்லை என்றார் அவர்.
நிறுவனங்கள் அவ்வாறு வர்த்தகத்தைவிட்டு வெளியேறாமல் இருக்கத் தேவையான ஆதரவு நடவடிக்கைகளையும் அரசாங்கம் வழங்குவது அவசியம் என்று அவர் சொன்னார்.
நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் இங்கும் அதுகுறித்துப் பேசினார்.
உலக வங்கி போன்ற அமைப்புகளின் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு, சிங்கப்பூர், பொருத்தமான கரிம வரியைத் தீர்மானிக்கலாம் என்று அவர் பரிந்துரைத்தார்.