டோங்காவுக்கு நிவாரணப் பொருள்களை விமானத்தின்வழி அனுப்புவதில் சிரமங்கள்
கடலடி எரிமலை வெடிப்பால் பேரழிவைச் சந்தித்துள்ளதாக அஞ்சப்படும் டோங்காவுக்கு நிவாரணப் பொருள்களை விமானத்தின்வழி அனுப்புவது சிரமமாய் உள்ளதாக நியூஸிலந்து தெரிவித்துள்ளது.
அந்நாட்டுத் தலைநகரின் விமானநிலைய ஓடுபாதையில் எரிமலைச் சாம்பல் படிந்திருப்பதால் விமானங்கள் தரையிறங்க முடியவில்லை.
தீவுக் கூட்டங்களை உள்ளடக்கிய டோங்காவுக்குத் தேவையான நிவாரணப் பொருள்களை இரண்டு கடற்படைக் கப்பல்களில் அனுப்பி வைப்பதாக நியூஸிலந்து அதிகாரிகள் கூறினர்.
ஆனால் அந்தக் கப்பல்கள் சென்றுசேர 3 நாள்கள் பிடிக்கும் என்பதை அவர்கள் சுட்டினர். நிவாரணப் பணிகளில் உதவக்கூடிய ஹெலிகாப்டர் ஒன்றும் கப்பலில் அனுப்பப்படும்.
எரிமலை வெடிப்பால் உண்டான சுனாமியால் அங்கே பேரழிவு நேர்ந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
சேதத்தை மதிப்பிடுவதற்காக அனுப்பப்பட்ட கண்காணிப்பு விமானத்தின்மூலம் ஓடுபாதையில் சாம்பல் படிந்திருப்பது தெரியவந்தது. சாம்பலை அகற்றினால் மட்டுமே விமானங்கள் தரையிறங்கமுடியும்.