'இருக்கும்போதே கொண்டாடுங்கள்'
இழப்பு. எங்கு ஓடி ஒளிந்தாலும் அதை மட்டும் தவிர்க்கமுடியாது. நெருங்கியவர்களை இழக்கும் தருணத்தைச் சமாளிக்கும் மன வலிமை நம்மிடம் இருக்கிறது என்று நம்மை நாமே திடப்படுத்திக்கொள்ளலாம், தயார்ப்படுத்திக்கொள்ளலாம்.
இழப்பு.
எங்கு ஓடி ஒளிந்தாலும் அதை மட்டும் தவிர்க்கமுடியாது.
நெருங்கியவர்களை இழக்கும் தருணத்தைச் சமாளிக்கும் மன வலிமை நம்மிடம் இருக்கிறது என்று நம்மை நாமே திடப்படுத்திக்கொள்ளலாம், தயார்ப்படுத்திக்கொள்ளலாம்.
ஆனால் அந்த நேரம் உண்மையிலேயே வரும்போது, உங்கள் உணர்வுகளையும் செய்கைகளையும் கண்டு நீங்களே வியந்துபோவீர்கள். உங்கள் கட்டுப்பாட்டை மீறி இருக்கும்.
இழப்பை விடக் கொடுமையானது, பிரியாவிடைக்கு வாய்ப்பு கிடைக்காதது.
இறுதித் தருணம் நெருங்கும்போது மனத்தில் இருப்பவற்றைக் கூற வழி கிடைத்தால் அதைக் காட்டிலும் பெரிய பாக்கியம் இருக்க முடியாது.
என்றோ செய்த தவற்றுக்கு மன்னிப்பு...
வழக்கமாக வெளிப்படுத்தாத அன்பு...
வாக்குறுதிகள்...
இதைவிட்டால் வேறு வாய்ப்பு கிடைக்காது என்று தோன்றும்போது எல்லாவற்றையும் தன்னால் செய்துவிடுவோம்.
தயக்கமும் வறட்டு கௌரவமும் காணாமற்போய்விடும்.
ஆச்சரியம் என்னவென்றால், அந்த இறுதித் தருணம் யாருக்கு, எப்போது வரும் என்பது எவருக்கும் தெரியாது.
ஆனால் அதுவரை ஏன் காத்திருக்க வேண்டும்?
"இருக்கும்போதே கொண்டாடுங்கள்”
இந்த இரு வார்த்தைகளைத் தந்தையைத் திடீரென இழந்த ஒருவர் அண்மையில் கூறியிருந்தார்.
வார்த்தைகள் இரண்டுதான். ஆனால் அவற்றின் கனத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.
நெருங்கியவர்களிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். செய்கைகளால் மட்டுமல்ல வார்த்தைகளாலும்.
“I Love You” என்று அடிக்கடி சொல்லுங்கள். இதைப் பெற்றோரிடம், பிள்ளைகளிடம், உடன்பிறப்புகளிடம் அவர்கள் கேட்கும்படி கூறுங்கள்.
வெளிப்படையாகப் பேசுங்கள்.
முடிந்தால் கட்டி அணைத்துக்கொள்ளுங்கள்.
ஒருவரின் குரல், சருமம், உருவம், அவரைப் பற்றிய அனைத்தும் அவர் பிரிந்தபிறகு வெறும் நினைவுகளாகின்றன.
நினைத்துப் பார்ப்பதற்குப் போதுமான தருணங்களை இப்போதே உருவாக்கிக்கொள்ளுங்கள்.
இல்லாதபோது கொண்டாடுவதில் ஒரு பயனும் இல்லை.
என்றும் அன்புடன்
சஹீரா பேகம்