
(படம்: Pexels)
நினைவு தெரிந்த நாள் முதல் இன்றுவரை நாம் கடந்துவந்த பாதை வெகுதூரம்.
கால ஓட்டத்தில் கடந்துவந்த பாதையைத் திரும்பிப் பார்க்க ஏது நேரம்?
அனுபவங்கள்... நமக்குள் ஆழமாகப் புதைந்திருக்கும் நினைவுகள்...
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும்... ஏன் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும்... எத்தனை விதமான சூழ்நிலைகள்.
எதை எப்படிக் கையாள்கிறோம்... அதைப் பொறுத்ததே வாழ்க்கைப் பாடம்.
சரியாகக் கையாண்டாலும் சரி, தவறாகக் கையாண்டாலும் சரி.
அது ஏதோ ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுத்துவிட்டுத்தான் போகிறது.
சற்றுப் பின்னோக்கிச் சென்று சில கடந்தகால நிகழ்வுகளை அசைபோட்டுப் பார்த்தால் நமக்கே அது புரியும்.
பெரும்பாலும் நாம் அனுபவிக்கிறோமே தவிர ஆராய்ந்து பார்ப்பதில்லை.
இது ஏன் நடந்தது, இதில் என் பங்கு என்ன, இதை நான் எப்படிக் கையாண்டிருக்கலாம்...
இவ்வாறெல்லாம் யோசித்தால் நிச்சயம் நமக்குள் ஒரு நல்ல மாற்றம் வரும்.
அதேபோல் மீண்டும் நடந்தால் எப்படிச் சமாளிப்பது என்பதும் தெரியவரும்.
பாடம் சொல்லித்தர வாழ்க்கையே போதும்.
வாழ்ந்துதான் பார்ப்போமே... வந்தால் வரவு, போனால் செலவு.
கைவிட்டுப் போவதையெல்லாம் இழப்பு என நினைக்கிறோம்.
வாழ்க்கை நம்மை எதையும் இழக்கவிடுவதில்லை.
ஒன்றை எடுத்துவிட்டு வேறொன்றைக் கொடுத்துவிடுகிறது.
வாழ்க்கையை நாம் நடந்து கடந்தால் பரவாயில்லை. ஓடிக் கொண்டிருக்கிறோம்.
அந்த ஓட்டத்தில் நமக்கு முன்னால் இருக்கும் ஓடுபாதையைத்தான் பார்க்கிறோமே தவிர, வந்த பாதையைத் திரும்பிப் பார்ப்பதில்லை.
அப்படித் திரும்பிப் பார்த்தால் பல விஷயங்கள் தெரியவரும்.
காலத்தைக் குறைசொல்வதை விட்டுவிட்டு அது என்னதான் நமக்குச் சொல்லவருகிறது என்று காதுகொடுத்துக் கேட்கலாமே.
வாழ்க்கை வலியல்ல.. அடுத்த நிலைக்குச் செல்ல உதவும் வழியாக இருக்கலாம் அல்லவா?
அன்புடன்
சித்ரா பாலகுமரன்