நம்மில் எத்தனை பேர் நமக்காக வாழ்கிறோம் ?
நான், எனது என்ற சுயநலத்தோடு வாழ்வதை நான் சொல்லவில்லை. பிறர் நலனுக்காகத் தம்மை ஓடாய்த் தேய்த்துக்கொண்டு உழைக்கும் உத்தமர்களையும் நான் குறிப்பிடவில்லை.
நம்முடைய உள்ளார்ந்த விருப்பத்துக்காக அன்றிப் பிறர் பார்வையில் மதிப்புடன் தென்பட வேண்டுமென்ற வறட்டு கௌரவத்துக்காக வாழ்வோரைப் பற்றித்தான் நான் பேச விரும்புகிறேன்.
அண்மையில் தீபாவளியை ஒட்டி வசந்தத்தில் ஒளியேறிய ஒரு படத் துணுக்கு உங்களுக்கு நினைவிருக்கலாம்.
வெற்று ஆடம்பரத்துக்காகப் பெரும் செலவு செய்து தீபாவளிக்காக வீட்டை அலங்கரித்த ஒரு பெண்மணி அதில் காட்டப்பட்டிருப்பார்.
இப்படிப்பட்ட சிலரை நானும் சந்தித்திருக்கிறேன்.
இவர்களுக்கு எப்போதுமே மற்றவர்களின் விமர்சனம் பற்றியே அக்கறை.
அடுத்தவர் தம்மைப் பாராட்ட வேண்டும். தன்னைப் பெரிய ஆள் என்று நினைக்க வேண்டும்.
இதற்காக இவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள்.
தகுதிக்கு மீறிக் கடன் வாங்கி வசதி இருப்பதுபோல் காட்டிக்கொள்வார்கள்.
வீடு.. வீடு விட்டால் அலுவலகம். வேறெங்கும் செல்லாவிட்டாலும் ஒரு பெரிய கார் வேண்டும். அப்போதுதானே மதிப்பு ?
சின்னக் குடும்பத்துக்குக் கடல் மாதிரி ஒரு பெரிய வீடு வாங்குவார்கள். அந்த வீட்டுக்கான அடைமானக் கடனைக் கட்டுவதற்காக வாழ்நாள் முழுவதும் உழைப்பதில் இவர்களுக்கு வருத்தமில்லை.