தீபாவளி: பசுமையா? பிளாஸ்டிக்கா?
தீபாவளியன்று வீட்டை அலங்கரிப்பதில் அனைவருக்கும் ஆர்வமுண்டு. அந்த அலங்காரப் பொருட்களில் அண்மைக் காலமாக பிளாஸ்டிக்கின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
தீபாவளியன்று வீட்டை அலங்கரிப்பதில் அனைவருக்கும் ஆர்வமுண்டு. அந்த அலங்காரப் பொருட்களில் அண்மைக் காலமாக பிளாஸ்டிக்கின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
தீபாவளிச் சந்தைக்குப் பொருள் வாங்கச் செல்லும்போது நம் கண்ணை நிறைப்பவை, அழகுமிக்க அலங்காரப் பொருட்கள்தாம். பெரும்பாலும் அவை விதவிதமான பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டவை. அடிப்படையான அலங்காரப் பொருட்களும்கூட இப்போது பிளாஸ்டிக் மயமாகிவிட்டன.
காவிக் கட்டி கரைத்துப் போடப்படும் அரிசி மாக்கோலத்தின் இடத்தை ஒட்டுவில்லைக் கோலங்கள் பிடித்து வருகின்றன. மாவிலை, தென்னங்குருத்துத் தோரணங்கள் மறைந்து பிளாஸ்டிக் நகல் தோரணங்கள் நிலைவாசலை அலங்கரிக்கின்றன.
மணமிக்க மலர் மாலைகளின் இடத்தை, பிளாஸ்டிக் பூ மாலைகள் பிடித்து வருகின்றன.பஞ்சுத் திரிபோட்டு எண்ணெய் ஊற்றி ஏற்றப்படும் மண் அகல் விளக்குகளின் இடத்தை மெல்ல மெல்ல மெழுகுவர்த்திகளும் LED என்னும் ஒளிஉமிழ் விளக்குகளும் பிடித்து வருகின்றன.
மரபார்ந்த மண் விளக்கு தீபம், இயற்கைத் தோரணங்களின் அருமையை உணர்ந்தவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். வாசலை அடைத்து மாக்கோலம் போடப் பலருக்கு ஆர்வமிருந்தாலும் இக்காலச் சூழ்நிலை அவர்களை ஒட்டுவில்லைக் கோலத்துக்குத் தள்ளுகிறது. இயற்கைப் பொருட்கள் மண்ணில் மட்கிப் போக சில மாதங்கள் போதும்.பிளாஸ்டிக் பொருட்களுக்கோ சில ஆயிரம் ஆண்டுகள் தேவை.
விழாக்கால உணர்வை வீட்டுக்குக் கொண்டுவருவதில், அலங்காரப் பொருட்களுக்கு முக்கியப் பங்குண்டு. அந்தப் பொருட்கள் சுற்றுச்சூழலை பாதிக்காத இயற்கையான பொருட்களாக இருந்தால் இன்னும் சிறப்பு. இயற்கையோடு இயைந்த பொருட்களோடு கொண்டாடும்போது, பரவசமான தீபாவளி பசுமையான தீபாவளியாகவும் அமைகிறது.