சுமார் 150,000 குடும்பங்கள் தண்ணீர்க் கட்டணத்தில் பாக்கி வைத்துள்ளன
சிங்கப்பூரில் சுமார் 150,000 குடும்பங்கள், தண்ணீர்க் கட்டணத்தை முழுமையாகச் செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புறத் துணையமைச்சர் டெஸ்மண்ட் டான் (Desmond Tan) கூறியுள்ளார்.
அத்தகைய குடும்பங்களுக்கு உதவும் புதிய சோதனைத் திட்டம் ஆராயப்படுகிறது.
தண்ணீர்க் கட்டணத்தை முழுமையாகச் செலுத்தாமல் பாக்கி வைத்துள்ள குடும்பங்களுக்கான தண்ணீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் கருவிகளைப் பொதுப் பயனீட்டுக் கழகம் பொருத்தியுள்ளது.
கட்டணம் முழுமையாகச் செலுத்திமுடிக்கப்பட்டதும் சீரான அழுத்தத்தில் தண்ணீர் விநியோகம் திரும்பும்.
ஆனால் சோதனைத் திட்டத்தின்கீழ் 50 குடும்பங்கள் இயல்பான அழுத்தத்தில் தண்ணீரைப் பெற முன்கூட்டியே ஓரளவு கட்டணம் செலுத்தலாம்.
அந்தக் கட்டணத்தில் 20 விழுக்காடு, பாக்கி வைத்துள்ள மொத்தக் கட்டணத்தைச் செலுத்தப் பயன்படுத்திக்கொள்ளப்படும்.
PAYU என்று அழைக்கப்படும் அந்தச் சோதனைத் திட்டம் ஏற்கெனவே மின்சாரக் கட்டணத்தை முழுமையாகச் செலுத்தாமல் பாக்கி வைத்துள்ள வாடிக்கையாளர்களிடம் நடப்பில் உள்ளது.