160 ஆண்டு இஸ்லாமிய மரபுடைமைத் தலம் மீண்டும் திறப்பு
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் 160 ஆண்டுப் பழைமையான இஸ்லாமிய மரபுடைமைத் தலம் பெரிய அளவிலான புதுப்பிப்புப் பணிக்குப் பிறகு நாளை (12 ஜனவரி) பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்படவுள்ளது.
ஹபிப் நோ கல்லறையில் (Habib Noh mausoleum) கடந்த ஒன்றரை ஆண்டாகப் புதுப்பிப்புப் பணி இடம்பெற்றது.
அதன் நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
பால்மர் ரோட்டில் ஹாஜி முகமது சாலே பள்ளிவாசலுக்குப் பக்கத்தில் ஹபிப் நோ கல்லறை அமைந்துள்ளது.
இஸ்லாமிய எழுத்துக் கலையுடன் கூடிய புதிய கோபுரம், புதிதாகச் சாயம் பூசப்பட்ட சுவர்கள், பலப்படுத்தப்பட்ட கட்டுமானங்கள் ஆகியவற்றை இப்போது அங்கு காணலாம்.
நூறாண்டுப் பழைமையான மாடிப்படிகளும் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
அவற்றின் தன்மை மாறாமல் வருகையாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவது நோக்கம்.
இரண்டு மில்லியன் வெள்ளி செலவிலான புதுப்பிப்புப் பணிக்கு ஆதரவாளர்களும் நன்கொடையாளர்களும் நிதி வழங்கியதாகப் பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவித்தது.
இதற்குமுன் 1986ஆம் ஆண்டுக்கும் 1987ஆம் ஆண்டுக்கும் இடையே பெரிய அளவிலான புதுப்பிப்புப் பணி இடம்பெற்றது.
இன்றைய திறப்பு விழாவில் பேசிய முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஃபைஷல் இப்ராஹிம் (Faishal Ibrahim) புதுப்பிப்புப் பணியின் நிறைவு சமூகத்தின் ஒற்றுமையையும் அர்ப்பணிப்பையும் காட்டுவதாகக் கூறினார்.
அதனைச் சாத்தியமாக்கிய நன்கொடையாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.