"சிங்கப்பூரர்கள் திரளாக வந்து நமது விளையாட்டாளர்களுக்கு ஆதரவு தரவேண்டும்"
சிங்கப்பூரர்கள் திரளாக வந்து நமது விளையாட்டாளர்களுக்கு ஆதரவு தரவேண்டும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் தான் சுவான் ஜின் (Tan Chuan Jin) கேட்டுக்கொண்டிருக்கிறார்.
தேசிய ஜூடோ அணியுடன் தேசிய ஒலிம்பிக் மன்றத்தின் தலைவர் திரு தான் சுவான் ஜின். (படம்: SNOC)
சிங்கப்பூர்: சிங்கப்பூரர்கள் திரளாக வந்து நமது விளையாட்டாளர்களுக்கு ஆதரவு தரவேண்டும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் தான் சுவான் ஜின் (Tan Chuan Jin) கேட்டுக்கொண்டிருக்கிறார். சிங்கப்பூர் விளையாட்டாளார்களுக்கு சொந்த மண்ணில் விளையாடும் சாதகம் இருக்கிறது; ஆனால் சிங்கப்பூரர்கள் தங்கள் ஆதரவைக் காட்டவில்லையெனில், அதனால் பயனிருக்காது என்றார், தேசிய ஒலிம்பிக் மன்றத்தின் தலைவருமான திரு தான்.
அடுத்த மாதம் 5ம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை தென் கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள் சிங்கப்பூரில் நடைபெறவிருக்கின்றன. மியன்மார், ஃபிலிப்பீன்ஸ், தாய்லந்து, மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்து பணிபுரிவோர், தத்தம் நாடுகளின் விளையாட்டாளர்களை ஊக்குவிப்பர் என்று கூறிய திரு தான், சென்ற ஆண்டு குடியரசு ஏற்று நடத்திய AFF Suzuki கிண்ணப் போட்டியின்போது, மலேசிய, மியன்மார் விளையாட்டாளர்களுக்குக் கிடைத்த ஆதரவைச் சுட்டினார். இம்முறை, சிங்கப்பூரர்களின் குரல் ஓங்கியிருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். விளையாட்டுகள், மக்களை ஒன்றிணைக்கும் ஓர் அம்சம் என்றும் அவர் குறிப்பிட்டார்.