குடிநுழைவுக் குற்றங்களின் தொடர்பில் கைதானோரின் எண்ணிக்கை 2014இல் குறைந்துள்ளது
சிங்கப்பூரில் சென்ற ஆண்டு, குடிநுழைவுக் குற்றங்களின் தொடர்பில் கைதானோரின் மொத்த எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது.
சாங்கி விமான நிலையத்தின் டெர்மினல் 2விலிருக்கும் குடிநுழைவு மண்டபத்திற்கு வருகையளிக்கும் பயணிகள்
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சென்ற ஆண்டு, குடிநுழைவுக் குற்றங்களின் தொடர்பில் கைதானோரின் மொத்த எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது.
ஆண்டு அடிப்படையில், 2013 ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க, குடிநுழைவுக் குற்றங்களுக்காகப் பிடிப்பட்டோரின் விகிதம் 19 விழுக்காடு குறைந்தது. குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் அந்தத் தகவல்களை வெளியிட்டது. 2013 ஆம் ஆண்டில் 600 கள்ளக் குடியேறிகள் பிடிபட்டனர். சென்ற ஆண்டு அந்த எண்ணிக்கை கிட்டதட்ட பாதி குறைந்து, 350-ஆக இருந்தது. அனுமதிக்கப்பட்ட காலத்தைத் தாண்டி சிங்கப்பூரில் இருந்தோரின் எண்ணிக்கையும் குறைந்தது. 2013 ஆம் ஆண்டு அந்தக் குற்றத்துக்காக ஆயிரத்து 930 பேர் கைதாயினர். சென்ற ஆண்டு, 1,690 பேர் அகப்பட்டதாக ஆணையம் சொன்னது. இருப்பினும், கள்ளக்குடியேறிகளுக்குத் தங்க இடம் கொடுத்தோரின் எண்ணிக்கை சென்ற ஆண்டு 7 விழுக்காடு அதிகரித்தது. இதற்கிடையே திருமணத்தின் வழி குடிநுழைவு ஆவணங்களைப் பெற முயற்சி செய்த 170 பேருக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டதாகவும் ஆணையம் சொன்னது. 2013 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், அது நாற்பது விழுக்காடு குறைவு. கள்ளப்பொருட்கள் வாங்கும் சம்பவங்கள் குறைந்திருந்தாலும், சிலர் இன்னமும் இணையத்தளங்களைப் பயன்படுத்தி அவற்றை வாங்குவதாக ஆணையம் சொன்னது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.