ஆட்குறைப்பைப் பற்றி முன்கூட்டியே தெரிவிக்கக் கோருவது வேலைகளைப் பாதுகாக்கும் வாய்ப்பைக் குறைக்கலாம்: மனிதவள அமைச்சர்
This audio is generated by an AI tool.
முதலாளிகள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளைப் பற்றி முன்கூட்டியே தெரிவிக்கவேண்டும் என்பது வேலைகளைக் காப்பாற்றும் முயற்சிக்கான வாய்ப்பைக் குறைத்துவிடலாம் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறியுள்ளார்.
தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங்கும் காங்கிரஸைச் சேர்ந்த மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்வைத்த கருத்துகளுக்கு டாக்டர் டான் அவ்வாறு பதிலளித்தார்.
ஆட்குறைப்புச் செய்யும் நிறுவனங்கள் பொதுவாக ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிந்த அளவுக்கு வேலைகளைக் காப்பாற்றும்.
ஆனால் முன்கூட்டியே தெரிவிக்கவேண்டுமானால் அத்தகைய பேச்சுவார்த்தையை நிறுவனங்கள் நடத்துவது சிரமம் என்று டாக்டர் டான் விவரித்தார்.
மேலும் நிறுவனங்களின் ரகசியத் தகவல்கள் கசிந்துவிடலாம் என்று அவர் சொன்னார்.
இதைப் பற்றி முத்தரப்புப் பங்காளிகளுடன் மனிதவள அமைச்சு பேசுவதாக டாக்டர் டான் தெரிவித்தார்.
பெரிய நிறுவனங்கள் ஆட்குறைப்புச் செய்தால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்குக் கூடுதல் இழப்பீடு வழங்கவேண்டும் என்ற பரிந்துரையைப் பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் முன்வைத்தார்.
அதற்கு டாக்டர் டான் ஆட்குறைப்பு நடக்கும் சூழ்நிலையில் நிறுவனங்கள் மாற்றங்களைச் செய்துகொள்ள வழிவகுக்கவேண்டும் என்று பதிலளித்தார்.
வெவ்வேறு காரணங்களுக்காக ஆட்குறைப்பு நடக்கும்; பெரிய நிறுவனமாக இருந்தாலும் இழப்பீடு வழங்க நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டிருக்கலாம் என்று அவர் கூறினார்.
இந்தச் செய்தி குறித்த மேல்விவரங்கள் விரைவில்....
'செய்தி' இணையவாசலுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.