சிங்கப்பெண்ணே! - தெரியாத ஊர், புரியாத மொழி, 3 பிள்ளைகள் - சவால்களை வெற்றியாக மாற்றிய சிங்கப்பூரர் #celebratingSGwomen
சிங்கப்பெண்ணே! - தெரியாத ஊர், புரியாத மொழி, 3 பிள்ளைகள் - சவால்களை வெற்றியாக மாற்றிய சிங்கப்பூரர்
வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகளைக் கண்டு துவண்டு போகாமல் என்ன வழிகள் உள்ளன என்பதை ஆராய்ந்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என்கிறார் அனீஸ் ஃபாத்திமா.
சிறு வயதிலிருந்து எதிர்கொண்ட துன்பங்கள் அனீஸைச் செதுக்கின.
இந்தச் சிங்கப்பெண்ணின் கதையைக் கேட்போமா?
நன்றாக இருந்த வாழ்க்கையில் தீடீர் திருப்பங்கள், வசதிமிக்க சிங்கப்பூரில் இருந்து, 3 குழந்தைகளுடன் பல சிக்கல்களில் இருந்த திமோர் லெஸ்ட்டேவுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம்.
தெரியாத ஊர், புரியாத மொழி, போதிய அடிப்படை வசதிகள் கூட இல்லை... இவை கண்டு மனம் தளராமல் இதை நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்தி முன்னேறியவர் 45 வயது அனீஸ்.
படிக்க ஆர்வம் ஆனால் முடியவில்லை:
அனீஸ் 18 வயதில் தந்தையை இழந்தார்.
அம்மாவின் உதவியால் பலதுறைத் தொழிற் கல்லூரியில் வர்த்தகத்தில் பட்டம் பெற்றார்.
படிக்க ஆர்வம் இருந்தும் குடும்பச் சூழல்நிலை காரணமாகத் தொடர்ந்து படிக்கமுடியவில்லை.
சில ஆண்டுகள் வேலையில் இருந்த அனீஸ் 25 வயதில் திருமணம் புரிந்தார்.
எதிர்பாரத் திருப்பங்கள்:
காதல் திருமணம்.
பல கனவுகளுடன் தொடங்கிய புது வாழ்க்கையில் எண்ணற்ற சவால்கள், கணவரிடம் இருந்து போதிய ஆதரவு இல்லை, கருத்து வேறுபாடு வேறு.
3 குழந்தைகளுக்காக வாழ்க்கையைத் தொடர வேண்டும். என்ன செய்வது? 10 ஆண்டு திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டார்.
புதிய வாய்ப்பு:
திருமண வாழ்க்கையில் இருந்த சிக்கல்களை எதிர்கொள்ள அனீஸூக்கு 2011ஆம் ஆண்டில் கிடைத்த திமோர் லெஸ்ட்டே வேலை வாய்ப்பு உதவியாக இருந்தது.
ஒரு வர்த்தக நிறுவனத்தை உருவாக்கும் பணி அனீஸூக்குக் கொடுக்கப்பட்டது.
போராட்டங்கள், பூசல்கள், வசதிகள் குறைவான ஊராக இருந்த திமோர் லெஸ்ட்டேவுக்கு 3 குழந்தைகளுடன் துணிந்து சென்றார் அனீஸ்.
அங்குள்ள வாழ்க்கை சிங்கப்பூரிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக இருந்தது.
கல்வி, உணவு, வாழ்க்கைமுறை, வேலை என அனைத்திலும் வேறுபாடுகள்.
ஊரடங்கு, போராட்டம், மின்சாரத் தடை என அவ்வப்போது பல எதிர்பாரா நிகழ்வுகள்.
ஆனால் இவற்றை ஊக்கப்படுத்தும் அனுபவங்களாகப் பார்த்தார் அனீஸ்.
சுமார் 3 ஆண்டு திமோர் லெஸ்ட்டே அனுபவம் அனீஸூக்குப் பல கதவுகளை திறந்தது.
மீண்டும் சிங்கப்பூர்:
மணமுறிவு தொடர்பான நடவடிக்கைகள், வீட்டுக்கடன், பிள்ளைகளை மீண்டும் பள்ளிகளில் சேர்ப்பது, புதிய வேலை என சிங்கப்பூருக்குத் திரும்பிய அனீஸூக்கு பல அடுக்குகளில் பிரச்சினைகள் இருந்தன.
ஒவ்வொன்றாக தீர்ந்த அவர் ஒரு நல்ல வேலையிலும் அமர்ந்தார்.
படிப்பே சிறந்த கவசம்:
படிப்பில் ஆர்வமுள்ள அனீஸ் மீண்டும் தமது கல்வியைத் தொடர்ந்தார்.
அதிகாலையில் வேலைக்குச் சென்றார்; இரவு நேரத்தில் படிக்கச் சென்றார்.
பிள்ளைகளுடனும் முடிந்த அளவு நேரம் செலவிட்டார்.
வேலை, படிப்பு, பிள்ளைகள் என 4 ஆண்டுகள் பம்பரம் போல் சுற்றிய அவர் 2020ஆம் ஆண்டு பட்டம் பெற்றார்.
இப்போது:
பிள்ளைகள் வளர்ந்து வருகின்றனர், வாழ்க்கையும் நிலையாக உள்ளது இருப்பினும் போட்டிமிக்க இந்த உலகில் தொடர்ந்து முன்னேற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் அனீஸ்.
பெண்ணின் போராட்டம் ஓய்வதில்லை. ஆனால் துணிந்து போராடினால் வானமே எல்லை என்கிறார் அனீஸ்.