சிங்கப்பூர் exclusive
"துணிவுதான் முதல் படி"- சிறுவர்களுக்கான சிறந்த தமிழ்ப் புத்தக விருது வென்றவர்
படம்: கௌஷிக்
This audio is generated by an AI tool.
தொடக்கநிலை 4ஆம் வகுப்பு வரை மட்டுமே தமிழ் படித்தவர்...
இப்போது சிறுவர்களுக்கான சிறந்த தமிழ்ப் புத்தக விருதைத் தட்டிச்சென்றுள்ளார்!
"கச்சேரி ஆரம்பம்" எனும் புத்தகத்தை எழுதியவர் உள்ளூர்க் கலைஞர் அபர்ணா கௌஷிக்.
கர்நாடக இசையை மையமாகக் கொண்டு அவர் புத்தகத்தின் கதையை உருவாக்கினார்.
தமது மகள் அக்ஷரா இசைப் பிரியர்; அவருக்கு இசை பற்றிய புத்தகத்தை வழங்கவேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதத் தொடங்கியதாகத் திருமதி அபர்ணா 'செய்தி'யிடம் பகிர்ந்தார்.
தமது மகளைத் தவிர மற்ற பிள்ளைகளும் பயனடையவேண்டும் என்று எண்ணிய அவர் சொந்தமாகப் புத்தகத்தை வெளியிட்டார்.
பிள்ளைகளின் மனங்களைக் கவர்ந்து அவர்களிடையே கலை மீதான ஆர்வத்தைத் தூண்ட புத்தகம் உதவும் என்றும் அவர் கூறினார்.
புத்தகத்தின் கருப்பொருள்: அச்சம் தவிர்.
பயத்தை மறந்து துணிச்சலுடன் எதையும் மேற்கொள்ளவேண்டும் என்பதைக் கதை எடுத்துரைக்கிறது என்று திருமதி அபர்ணா குறிப்பிட்டார்.
புத்தகம் பிள்ளைகளுக்காக எழுத்தப்பட்டிருந்தாலும், அதை வாங்கிய பெற்றோர் பலர் பயனடைந்திருப்பதாக அவர் சொன்னார்.
குறிப்பாக, அவர்களும் தங்கள் வாழ்க்கையில் சாதிக்க விரும்புவதைச் செய்ய புத்தகம் ஊக்கமளித்ததாகப் பெற்றோர் தம்மிடம் சொன்னதாய் திருமதி அபர்ணா விவரித்தார்.
இப்போது விருதையும் வென்ற அவர், "நான் அதிக ஆதரவு இல்லாமல் புத்தகத்தை வெளியிட்டு விருதை வென்றிருக்கிறேன். இதைப் பார்க்கும் நம் சமூகத்திலுள்ள மற்றவர்கள் தங்களாலும் லட்சியத்தை அடையமுடியும் என்று எண்ணத் தொடங்குவார்கள்," என்று கூறினார்.