விமானத் துறை - அடுத்த ஆண்டு கிருமிப்பரவலுக்கு முந்தைய நிலைக்குத் திரும்பும்: IATA
உலகளாவிய விமானப் போக்குவரத்தின் மீட்சி, சிங்கப்பூரின் விமான நடுவம் மேலும் வளர்ச்சியடைய வாய்ப்புகளை வழங்குவதாக அனைத்துலக ஆகாயப் போக்குவரத்துச் சங்கம் IATA கூறியுள்ளது.
அடுத்த ஆண்டு விமானத் துறை, கிருமிப்பரவலுக்கு முந்தைய நிலைக்குத் திரும்பும் என்று IATA தலைமை இயக்குநர் வில்லி வால்ஷ் (Willie Walsh) சொன்னார்.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் அனைத்துலகப் பயணத் தேவை எதிர்பார்த்ததை விட வலுவாக மீண்டு வந்துள்ளது.
முழுமையாகத் தடுப்பூசிப் போட்டுக்கொண்டோருக்கான பயணத்துக்கு அனுமதி வழங்கப்பட்ட ஒரு மாதத்தில், சாங்கி விமான நிலையம் நோய்ப்பரவலுக்கு முன்பிருந்த பயணிகள் விகிதத்தில் 40 விழுக்காட்டை எட்டியுள்ளது.
ஆனால், விமானத் துறையின் பெரிய சந்தைகளான சீனா, ஜப்பான் போன்ற நாடுகளின் எல்லைகள் இன்னும் திறக்கப்படவில்லை.
அத்தகைய இடங்களைத் தவிர்த்து சிங்கப்பூர் போன்ற இடங்கள் மீது விமான நிறுவனங்கள் கவனம் செலுத்தும் என்று தலைமை இயக்குநர் திரு. வால்ஷ் கூறினார்.
கிருமிப்பரவல் காலம் முழுவதும் எல்லைகளைத் திறக்க சிங்கப்பூர் அரசாங்கம் தொடர்ந்து விருப்பம் தெரிவித்ததே அதற்குக் காரணம்.
சிங்கப்பூர் அதன் கட்டமைப்பைத் தொடர்ந்து வளர்த்து, செயல்திறனை மேம்படுத்தினால், ஹாங்காங் போன்ற பெரிய அளவிலான விமான நடுவங்களை விடச் சிறப்பாகச் செயல்பட முடியும் என்றார் திரு. வால்ஷ்.
ஆனால் மத்திய கிழக்கில் வளர்ந்து வரும் விமான நடுவங்கள் போட்டி தரும் என்றும் அவர் கூறினார்.
பயணச் சீட்டுகளின் விலை உயர்ந்தாலும், பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று திரு. வால்ஷ் நம்பிக்கை தெரிவித்தார்.