சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
இந்திய உணவை வாழை இலையில் வைத்து உண்பதில் இருக்கும் சுவையே தனி! ஆனால் வாழையிலைத் தட்டுப்பாடு ஏற்படும்போது?
வாழை இலை விநியோகத்தில் நீண்டகாலமாகவே பிரச்சினை இருப்பதாக உள்ளூர் விநியோக நிறுவனங்களில் சில கூறுகின்றன.
அத்தகைய சிக்கல், வாழை இலையில் பாரம்பரிய இந்திய உணவு பரிமாறும் உணவகங்களையும் பாதித்துள்ளது.
தற்போதைய நிலை எவ்வாறு உள்ளது? அதுபற்றி மேலும் தெரிந்துகொள்ள முனைந்தது செய்தி.
2 மாதத்துக்கு வாழை இலைப் பற்றாக்குறை!
Krishnan G Food Impex நிறுவனத்தின் உரிமையாளர் கிருஷ்ணன் செய்தியுடன் பேசினார்.
மலேசியாவின் ஈப்போ, ஜொகூர் பகுதிகளிலிருந்து வாழை இலைகளை அவரது நிறுவனம் தருவிக்கிறது.
கிருமிப்பரவல் சூழலில் அறிவிக்கப்பட்ட முடக்கத்தால் மலேசியத் தோட்டங்களில் வேலைசெய்வோர் எண்ணிக்கை குறைந்தது. வரும் வாழை இலைகளின் அளவும் குறைந்தது
இந்தியா, வியட்நாம், இந்தோனேசியா ஆகியவற்றிலிருந்து வாழை இலைகளைப் பெற நிறுவனம் திட்டமிட்டது.
- நீண்டநேரப் பயணத்துக்குப் பின் வாழை இலைகள் வாடிப் போகும்
- விமானத்தில் கொண்டுவரப்படும் வாழை இலைகளின் விலை அதிகம்
இத்தகைய காரணங்களால் அவற்றை இந்தியா, வியட்நாம், இந்தோனேசியாவிலிருந்து தருவிக்க நிறுவனம் எண்ணவில்லை.
சில நேரங்களில் வாழை இலைகள் கேட்டதைவிடக் குறைவான அளவில் விநியோகம் செய்யப்படுகின்றன என்றார் சகுந்தலாஸ் (Sakunthalas) உணவகத்தின் இயக்குநர் மாதவன்.
கிடைக்கும் குறைவான வாழை இலைகளிலும் சில, கிழிந்த நிலையில் இருக்கும்... அவற்றையும் ஒட்டிச் சரிசெய்யவேண்டிய தேவை ஏற்படும்
என்று அவர் சுட்டினார்.
தட்டுப்பாடு பெரிய அளவில் இல்லையே... சமாளிக்க முடிந்ததுதான்
என்கிறார் வாழை இலைகளை விநியோகிக்கும் திரு. மாறன்.
அவரது நிறுவனம் வியட்நாம், மியன்மார், மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து வாழை இலைகளை இறக்குமதி செய்கிறது.
குளிர்பதன அறையில் 2 வாரங்களுக்குத் தேவையான வாழை இலைகளைப் பதப்படுத்துவதன் மூலம் நிறுவனம் தட்டுப்பாடுகளைச் சமாளிக்கிறது என்றார் திரு. மாறன்.
3 வாரங்களுக்குத் தட்டுப்பாட்டை எதிர்நோக்கினோம்
என்கிறார் காயத்திரி உணவகத்தின் உரிமையாளர் சண்முகம்.
மலேசியாவிலுள்ள தோட்ட ஊழியர்கள் பலரும் விடுப்பில் இருப்பதால் தட்டுப்பாடு ஏற்படுகிறது
என்று சுட்டினார் அவர்.
மழைக்காலத்திலும் விழாக்காலத்திலும் தோட்ட ஊழியர்களில் அதிகமானோர் விடுப்பில் செல்கின்றனர். அதனால் தட்டுப்பாடு ஏற்படும் என்றார் Grace Pot உணவகத்தின் இயக்குநர் சுரேஷ்.
சிறிய உருவத்தில் நம்மிடம் வந்துசேரும் வாழை இலைகளை, அழகாக வெட்டித் தட்டில் வைத்து உணவு பரிமாறுகிறோம்.
என்றார் அவர்.
இயற்கை வளங்கள் அதிகம் இல்லாத சிங்கப்பூரில் வாழைத் தோட்டங்கள் குறைவு. அதன் காரணமாக அண்டை நாடுகளை நம்பியிருக்கவேண்டிய நிலை உள்ளது. இருப்பினும், இந்திய உணவுத் துறையில் உள்ள நிறுவனங்கள் நிலைமையை ஆக்ககரமான முறையில் சமாளித்துவருகின்றன.