சிங்கப்பூர் trending
குப்பைக்குள் போன கைத்தொலைபேசி... தேடிக் கொடுத்த ஊழியர்
காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்: TikTok/shalzsaidwhat
This audio is generated by an AI tool.
குப்பைக் குழாயில் விழுந்த பெண் ஒருவரின் கைத்தொலைபேசி மீட்கப்பட்டதைக் காட்டும் காணொளி இணையத்தில் பரவலாகப் பகிரப்படுகிறது.
சம்பவம் கடந்த வாரம் சுவா சூ காங்கில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (HDB) அடுக்குமாடிக் குடியிருப்பில் நடந்தது.
சமையலறையைச் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது தமது அம்மா மேசை விரிப்புடன் சேர்த்து கைத்தொலைபேசியையும் தவறுதலாக சுற்றி குப்பைக் குழாயில் போட்டுவிட்டதாக மகள் ஷாலினி சொன்னார்.
செய்வதறியாமல் அவர்கள் நகர மன்ற ஊழியரின் உதவியை நாடினர்.
உதவிக்கு வந்த ஊழியர் குப்பைக் குழாயைத் திறந்து குப்பைத் தொட்டியை வெளியே எடுத்து தேடத் தொடங்குவதைக் காணொளியில் பார்க்க முடிகிறது.
குப்பையில் கிடந்த மேசை விரிப்பைத் திறந்து பார்த்தபோது கைத்தொலைபேசி உள்ளே இருந்தது.
அதை ஊழியர் எடுத்துக் கொடுத்தார்.
அவரின் உதவியால் மிகவும் நெகிழ்ந்ததாக ஷாலினி கூறினார்.
கைத்தொலைபேசி கிடைத்த மகிழ்ச்சியில் அவரது அம்மா ஊழியருடன் selfie படம் எடுப்பதையும் காண முடிகிறது.
ஊழியருக்கு நன்றிகூறி சிறிய தொகையைப் பரிசாகக் கொடுத்ததாவும் ஷாலினி பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஊழியரைப் பாராட்டி நகர மன்றத்துக்குக் கடிதம் அனுப்ப தமது அம்மா அவருடன் படம் எடுத்துக்கொண்டதாகவும் ஷாலினி சொன்னார்.
அதனைப் பார்த்த பலர் தங்கத் தோடு, பணப்பை ஆகிய பொருள்களைத் தவறுதலாகக் குப்பைக் குழாயில் போட்ட தங்களது அனுபவத்தையும் பதிவிட்டுள்ளனர்.
காணொளியை 1,300க்கும் அதிகமானோர் பகிர்ந்துள்ளனர்.