செல்லமே! - குட்டிச் செல்லங்களுக்குப் புத்தகத்தில் புத்தாக்கம் - தொட்டுணரக்கூடிய புத்தகங்கள்!
Sensory books எனும் தொட்டுணரக்கூடிய புத்தகங்கள் - தமிழிலும் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?
Sensory books எனும் தொட்டுணரக்கூடிய புத்தகங்கள் - தமிழிலும் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?
பிள்ளைகளுக்குத் தமிழில் தொட்டுணரக்கூடிய புத்தகங்களைத் தயாரிக்கிறது, Chellamey Books எனும் நிறுவனம்.
நிறுவனத்தை நடத்தும் ரஸ்மியா பானு, உஷா குமாரன் ஆகிய இருவரிடமும் பேசி மேலும் தெரிந்துகொண்டது செய்தி!
Sensory Books - தொட்டுணரக்கூடிய புத்தகங்கள் என்றால் என்ன?
- கண்களைக் கொண்டு வாசிப்பதோடு, தொட்டுணரக்கூடிய புத்தகங்கள், அவற்றில் உள்ள சில பகுதிகளைத் தொட்டு, உணர வகைசெய்கின்றன.
- அத்தகைய புத்தகங்கள் சிறுவயதுப் பிள்ளைகளுக்கு மிகப் பொருத்தமானவை.
- அவற்றில் வெவ்வேறு மேற்பரப்புகள், நிறங்கள், போன்றவற்றைக் காணலாம்.
- பிள்ளைகளின் வாசிப்பு, கேட்டல் திறன், தொட்டுணர்வு போன்றவற்றையும் அதுபோன்ற நூல்கள் வளர்க்கும்.
ஏன் தமிழில்?
பிள்ளைகள் தொட்டுணரக்கூடிய புத்தகங்களை ஆங்கில மொழியில் வாசிக்கும்போது அவர்கள் அதை மகிழ்ச்சியுடன் செய்கின்றனர்
தமிழில் அத்தகைய புத்தகங்கள் மிகக் குறைவாகவே உள்ளன
என்கின்றனர் ரஸ்மியாவும் உஷாவும்.
இருவரும் தங்களுக்கு மிகப் பிடித்தமான தமிழ்மொழியைப் பிள்ளைகளும் கற்றுக்கொள்ள வைப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள்.
ஆர்வத்தைத் தூண்டக்கூடிய தொட்டுணரக்கூடிய புத்தகங்களைத் தமிழில் தயார்செய்ய அவர்கள் முனைந்தனர்.
அத்தகைய புத்தகங்களைத் தயார் செய்தது எப்படி?
எந்தெந்த வயது வரம்பில் உள்ள பிள்ளைகளுக்கு எந்தவிதமான புத்தக அம்சங்கள் மிகப் பிடிக்குமென அவர்கள் தீர ஆராய்ந்தனர்.
சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருமொழி வழக்கில் பிள்ளைகளை வளர்ப்பதையும் அவர்கள் கருத்தில் கொண்டனர்.
நிலா நிலா ஓடி வா
எங்கேயோ கேட்டது போல் இருக்கிறதா? சிறுவயதில் சிலரின் பெற்றோர் அவர்களுக்கு அந்தத் தலைப்புகளில் புத்தகங்களையோ, பாடலையோ அறிமுகப்படுத்தி இருக்கலாம்.
அவற்றில் பொதுவாக ஆண் பிள்ளைகளை மூல கதாபாத்திரமாகக் கண்டிருப்போம். ரஸ்மியா, உஷாவின் தயாரிப்பில் அந்தப் புத்தகத்தில் சிறுமி ஒருத்திக்கு விண்வெளி, ரயில்வண்டிகள் போன்றவற்றில் ஆர்வம் இருப்பதைக் கவனிக்கலாம்.
மிக மறைமுகமாகப் பாலின வேறுபாட்டையும் எதிர்பார்ப்புகளையும் முறியடிக்கும் வண்ணம் புத்தகங்களை அமைத்திருப்பதாக இருவரும் கூறினர். அதே வேளையில் அவர்கள் நவீனத்தையும் புத்தகங்களில் சேர்த்திருக்கின்றனர்.
அவர்களது தயாரிப்பில் இதுவரை இரண்டு புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நிலா நிலா ஓடி வா, தோசை அம்மா தோசை என இரு மிகப் பிரபலமான கதை-பாடல்களைப் புதுமையாக்கிப் புத்தகங்கள் வெளியிட்டுள்ளனர் இருவரும்.
தற்போது மேலும் சில புத்தகங்களை அவர்களே எழுதித் தயாரிக்கின்றனர். அவர்கள் வெளியிடவுள்ள புதிய நூல்கள் சமூகத்தில் காணப்படுபவை, தன்னம்பிக்கை ஊட்டும் நன்னெறிகள் போன்றவற்றைச் சிறுவயதினருக்கு மிக எளிய விதத்தில் தமிழில் கற்பிக்கும் என்கின்றனர்.
அவர்களது புத்தாக்கமிக்க புத்தகங்கள் பெற்றோரைப் பிள்ளைகளுடன் பல முக்கியமானவற்றைப் பற்றிப் பேசத் தூண்டும் என்று நம்புகின்றனர்.