சிங்கப்பூர் exclusive
சத்தம் இல்லாமல் ஏற்படும் சிறுநீரகக் கோளாறு - போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறீர்களா?
சிறுநீரகச் செயலிழப்பு....
தற்போது சிங்கப்பூரர்கள் மத்தியில் பெரும் கவலையாக உருவெடுத்துள்ளது.
சிங்கப்பூரில் நாளொன்றுக்கு 6 பேருக்குச் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படுவதாக அண்மையில் தகவல் வெளியானது.
இந்தப் பயமுறுத்தும் எண்ணிக்கைக்குக் காரணம் என்ன? யார் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்? சிறுநீரகம் செயலிழப்பதை எவ்வாறு தடுப்பது?
செங்காங் பொது மருத்துவமனையின் சிறுநீரகவியல் (Urology) மருத்துவர் டாக்டர் பழனியப்பன் சுந்தரத்தைக் கேட்டறிந்தது "செய்தி".
இளம் வயதினருக்கும் சிறுநீரகம் பாதிக்கப்படலாம்
சிங்கப்பூரில் பெரும்பாலும் 45 க்கும் 64 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் சிறுநீரகச் செயலிழப்பால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
ஆனால் இளம் வயதினர் அதற்கு விதிவிலக்கல்ல என்கிறார் டாக்டர் பழனியப்பன்.
சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் தொற்று, 'reflux nephropathy', 'nephrotic syndrome' எனப்படும் சிறுநீரகக் கோளாறு ஆகியவற்றால் இளம் வயதினரும் பாதிக்கப்படலாம் என்கிறார் அவர்.
சிறுநீரகம் செயலிழக்கக் காரணம்?
📌முக்கியக் காரணங்களில் ஒன்று நீரிழிவு. சிறுநீரகம் செயலிழந்த மூன்றில் இரு சிங்கப்பூரர்களுக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
📌சிறுநீரகத்தில் 'Glomerulonephritis' எனப்படும் ஒருவகை வீக்கம் ஏற்படுவதாலும் உயர் ரத்த அழுத்தத்தாலும்கூட சிறுநீரகம் செயலிழக்கிறது.
📌சிங்கப்பூரர்களில் பலர் தங்களுக்கு நீரிழிவு இருப்பதைத் தாமதமாகக் கண்டறிகின்றனர். இதனால் சிறுநீரகம் செயலிழப்பதைத் தடுக்க முடியாமல் போகின்றது.
📌உடல்பருமன் பிரச்சினையும் சிறுநீரகம் செயலிழக்கக் காரணமாகின்றது.
தீர்வு?
அன்றாட வாழ்க்கையில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் செயலிழப்பைத் தடுக்க முடியும் என்கிறார் டாக்டர் பழனியப்பன்.
✅உணவு முறை - உப்பையும் சீனியையும் குறைக்கலாம்.
✅உடற்பயிற்சி - உடல் பருமனாக இருந்தால் எடையைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும். இதன் வழி ரத்த அழுத்தத்தையும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்த முடியும்.
✅சிகரெட்டை நிறுத்துவது - சிறுநீரகச் செயலிழப்பு இதயக் கோளாறுகளைக் கொண்டுவரும் என்பதால் இந்தப் பழக்கத்தைக் கைவிடுவது நல்லது.
✅போதிய அளவு தண்ணீர் அருந்துவது - குறிப்பாகச் சிறுநீரகக் கற்கள் அல்லது சிறுநீர்ப் பாதையில் தொற்று இருந்தால் தண்ணீர் அருந்துவதில் அலட்சியம் காட்டக்கூடாது.
சிறுநீரகச் செயலிழப்புக்கான அறிகுறிகள் குறித்து அடிக்கடி தவறான தகவல்கள் பரவுகின்றன.
சிறுநீர் கழிக்கும்போது அல்லது சிறுநீரகம் இருக்கின்ற பகுதியில் வலி ஏற்பட்டால் அது செயலிழப்பின் அறிகுறி என்று சிலர் நினைக்கின்றனர்.
உண்மையில் சிறுநீரகம் செயலிழந்தால் அதற்கு ஆரம்பக் கட்டத்தில் அறிகுறிகள் ஏதும் தோன்றாது; படிப்படியாக மோசமாகும் போதுதான் அது தெரியவரும்.
40 வயதாகிவிட்டால் ரத்த அழுத்தம், ரத்தப் பரிசோதனை ஆகியவற்றை அடிக்கடி செய்துகொள்வது நல்லது என டாக்டர் பழனியப்பன் அறிவுறுத்தினார்.