வெளிநாடுகளின் உதவியுடன் 59 மின்-சிகரெட் கடத்தல் சம்பவங்கள் கண்டுபிடிப்பு
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் வெளிநாடுகளின் உதவியுடன் கடந்த ஆண்டு 59 எல்லைகடந்த மின்-சிகரெட் கடத்தல் சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அவற்றில் மொத்தம் 230,000 மின்-சிகரெட்டுகளும் அவை சார்ந்த பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகச் சுகாதாரத் துணையமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் (Rahayu Mahzam) சொன்னார்.
அதையொட்டி நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம், காவல்துறை, மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு ஆகியவை வெளிநாட்டுத் தரப்புகளுடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதுண்டு.
அவ்வாறு வெளிநாட்டு அதிகாரிகளிடமிருந்து பெற்ற தகவலை வைத்துப் பெரிய அளவிலான 59 கடத்தல் சம்பவங்களைக் கண்டுபிடிக்கமுடிந்ததாகத் திருவாட்டி ரஹாயு சொன்னார்.
இணையத்தில் மின்-சிகரெட் விளம்பரங்களை நீக்கச் சமூக ஊடக நிறுவனங்கள், இணைய வர்த்தகத் தளங்கள் ஆகியவற்றுடன் அறிவியல் சுகாதார ஆணையம் செயல்படுவதாகவும் அவர் கூறினார்.
கடந்த 2 ஆண்டுகளில் 10,000 விளம்பரங்கள் நீக்கப்பட்டதாகத் திருவாட்டி ரஹாயு சொன்னார்.
மின்-சிகரெட்டுகளை ஒழிப்பதற்கு அமலாக்க நடவடிக்கை மட்டும் போதாது; மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிப்பதும் முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார்.
அதற்குத் தொடர்ந்து முயற்சி எடுக்கப்படுவதாகத் திருவாட்டி ரஹாயு தெரிவித்தார்.