வீட்டுக் கடனுக்கான நிரந்தர வட்டி விகிதத்தைத் தற்காலிகமாக அகற்றியிருக்கும் DBS வங்கி
வீட்டுக் கடனுக்கான நிரந்தர வட்டி விகிதத்தை (Fixed Rate) DBS வங்கி தனது இணையப்பக்கத்திலிருந்து தற்காலிகமாக அகற்றியுள்ளது.
CNA அதுகுறித்துக் கேட்டபோது விகிதத்தை மறுஆய்வு செய்வதாக வங்கி சொன்னது.
நேற்று முன்தினம், அமெரிக்க மத்திய வங்கி வட்டி வகிதத்தை முக்கால் விழுக்காட்டுப் புள்ளி அதிகரித்தது.
அதற்குமுன் ஜூன், ஜூலை மாதங்களிலும் வட்டி விகிதம் அதிகரித்தது.
அதனையடுத்துக் கடன் கொடுக்கும் அமைப்புகள் தங்கள் வீட்டுக் கடன் விகிதத்தில் மாற்றம் செய்தன.
நிரந்தர வட்டி விகிதத்தில் அதிக மாற்றம் செய்யப்பட்டது. சில நிதி அமைப்புகள் ஒட்டுமொத்தமாக நிரந்தர விகிதக் கடனை நிறுத்திவிட்டன.
DBS வங்கியைப் பொறுத்தவரை, அது ஈராண்டுகளுக்கும், மூவாண்டுகளுக்கும் வீட்டு அடைமானக் கடனை நிரந்தர விகிதத்தில் கொடுத்துவந்தது.
அது ஆண்டுக்கு 2.75 விழுக்காடாக இருந்தது.
வட்டி விகிதம் அதிகரிப்பதால் வீடு வாங்குவோர் கடனைத் திரும்பச் செலுத்த முடியுமா என்பதைச் சிந்தித்துப் பார்த்து முடிவெடுக்கும்படி வங்கிகள் கேட்டுக்கொண்டுள்ளன.
மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிகரிப்பது ஏன்?
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தப் பொதுவில் வங்கிகள் வட்டி விகிதத்தை அதிகரிப்பதுண்டு.
அப்படி அதிகரிக்கும்போது கடன் வாங்குவோர் எண்ணிக்கையும் கடன் வாங்கும் தொகையும் குறையும்.
அதனால் மக்கள் செலவுகளைக் குறைத்துக் கொள்வர். அதன்மூலம் பொருள்களின் விலை குறைய வாய்ப்பு ஏற்படும்.
ஆனால் பொருள் வாங்கும் போக்கு குறைந்துகொண்டே போனால் அது பொருளியலை மந்தநிலைக்கும் இட்டுச் செல்லக்கூடும்.