வேலைசெய்யும் பெரியவர்கள் பட்டப்படிப்பை மேற்கொள்ளக் கூடுதல் வாய்ப்புகள்
வேலைசெய்யும் பெரியவர்கள் பட்டப்படிப்பை மேற்கொள்ளக் கூடுதல் வாய்ப்புகளைப் பெறலாம் என்று கல்வியமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.
'lifetime cohort participation rate' அதாவது அமைச்சின் ஆதரவு பெற்ற பட்டப்படிப்பில் பயிலும் பிரிவினரின் விகிதத்தை அதிகரிப்பதற்கு ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் படிப்பைப் புதிதாக முடிப்போரிடையே அந்த விகிதம் 40 விழுக்காடாக உள்ளது.
கல்வி பயிலும் பெரியவர்களிடையே அந்த விகிதம் 10 விழுக்காடாக உள்ளது.
"வாழ்க்கை முழுவதும் வேலையிலும் கற்றலிலும் மாறிமாறி ஈடுபடும் வேளையில், வேலைக்குச் செல்வதற்குமுன் பட்டப்படிப்பை முடிப்போரின் விகிதத்திற்கு அப்பால் பார்ப்பது அவசியம். வாழ்க்கை முழுவதும் திறன் வளர்ச்சியின்மீது கவனம் செலுத்தப்படவேண்டும்,"
என்று அமைச்சர் சான் கூறினார்.
அதுகுறித்துக் கல்வியமைச்சு, வர்த்தக, தொழில் அமைச்சு, மனிதவள அமைச்சு ஆகியவை கூடுதல் பரிசீலனையில் ஈடுபடும் என்று அவர் சொன்னார்.
பட்டப்படிப்பில் பயிலும் பிரிவினரின் விகிதத்தை அதிகரிப்பதன்மூலம் மேலும் அதிகமான பெரியவர்கள் பட்டப்படிப்பை மேற்கொள்ள முன்வரலாம்.
சிங்கப்பூர்ப் பொருளியலின் முக்கிய அம்சங்களில் ஆதரவளிக்கவும் அவர்களுக்குக் கூடுதல் வாய்ப்புகள் வழங்கப்படலாம் என்று திரு. சான் சொன்னார்.