பொருள்களை விநியோகம் செய்வோரைக் குறிவைத்து நடக்கும் மோசடிகள்
பொருள்களை விநியோகம் செய்வோரைக் குறிவைத்து மோசடிகள் மீண்டும் நடப்பதாகக் காவல்துறை எச்சரித்துள்ளது.
ஏப்ரல் மாதம் முதல் பலர் அத்தகைய மோசடிகளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறைந்தது 2,000 வெள்ளி நட்டம் ஏற்பட்டதாகக் காவல்துறை கூறியது.
முதல் வகை மோசடி:
- மோசடிக்காரர்கள் விநியோகம் செய்யும் நிறுவனங்களின் தளம் மூலம் கோரிக்கை அனுப்புவார்கள்.
- பின்னர் விநியோகம் செய்பவரைத் தொடர்புகொண்டு, கடைகளில் iTunes அன்பளிப்பு அட்டைகளை வாங்குவதில் உதவும்படியும் பிறகு அவற்றைக் கொடுக்கவேண்டிய இடத்தையும் அவர்கள் குறிப்பிடுவார்கள்.
- அட்டையை வாங்கியதற்கான ஆதாரமாக அதன் பின்னால் இருக்கும் குறியீட்டைக் கீறி, நிழற்படம் எடுத்துத் தனக்கு அனுப்புமாறு மோசடிக்காரர்கள் கேட்பர்.
- விநியோகம் செய்யும் நபர் அவ்வாறு செய்ததும், மோசடிக்காரர்களைத் தொடர்புகொள்ள முடியாது. வாங்கப்பட்ட அட்டைகளுக்குப் பணம் கொடுக்காமல் அவர்கள் காணாமல் போய்விடுவர்.
இரண்டாம் வகை மோசடி:
- இதில், விநியோகம் செய்பவர் செல்லவேண்டிய இடம் பணம் அனுப்பும் சேவையை வழங்கும் நிறுவனமாக இருக்கும்.
- அவரைத் தொடர்புகொள்ளும் மோசடிக்காரர், ஒரு குறிப்பிட்ட தொகையை வெளிநாட்டுக் கணக்கு ஒன்றுக்கு அனுப்புமாறு சொல்வார். அவ்வாறு செய்தால் அவருக்கு 100 வெள்ளி கிடைக்கும் என்று மோசடிக்காரர் கூறுவார்.
- தொகையை அனுப்பிய பின்னர் மோசடிக்காரர்களைத் தொடர்புகொள்ள முடியாது.
- செல்லவேண்டிய இடத்துக்குப் போனதும் அங்கு யாரும் இல்லை என்பது விநியோகம் செய்பவருக்குத் தெரியவரும். அனுப்பிய தொகையையும் திரும்பப் பெறமுடியாது.