சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
COVID-19 நோயைக் கையாள்வதற்குப் பல வழிகளில் பங்காற்றியவருக்கு லீ குவான் இயூ உபகாரச்சம்பளம்
லீ குவான் இயூ உபகாரச்சம்பளம் இவ்வாண்டு மூவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூருக்கும் அதன் குடிமக்களுக்கும் சேவையாற்றுவதில் அதிக ஈடுபாடு காட்டும் தனிநபர்களுக்கு அந்த விருது வழங்கப்படுகிறது.
அத்தகையோர் உயர்கல்வியை மேற்கொள்ள அந்த உபகாரச்சம்பளம் உதவும்.
லீ குவான் இயூ உபகாரச்சம்பள விருது பெற்றவர்களில் ஒருவர் பிரெமிக்கா.
2019ஆம் ஆண்டில் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில் அவர் மருத்துவப் பட்டப்படிப்பை முடித்தார்.
கிருமிப்பரவல் காலக்கட்டத்தில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று COVID-19 நோயைக் கையாள்வதில் உதவும் பல முயற்சிகளில் ஈடுபட்டார் பிரெமிக்கா.
வீட்டிலிருந்தபடி குணமடையும் திட்டம் அறிமுகமான வேளையில் பலருக்குக் குழப்பம் இருந்ததை அவர் உணர்ந்தார்.
நிறைய நோயாளிகள் கோபத்திலும் குழப்பத்திலும் இருந்தார்கள். நிறையப் பேருக்கு இந்தத் திட்டம் புரியவில்லை.
சிலருக்கு மருத்துவ உதவி நேரத்தோடு கிடைக்கவில்லை
என்று பிரெமிக்கா கூறினார்.
நிலைமையைச் சமாளிக்க அவர் இணையம்வழி நோயாளிகளுக்கு மருத்துவச் சிகிச்சை வழங்குவதற்கு முன்வந்தார்.
ஒரு திட்டத்தைச் செயல்படுத்தும்போது மக்கள் அந்தத் திட்டத்தை எவ்வாறு ஏற்றுக்கொள்கிறார்கள்... புரிந்துகொண்டார்களா இல்லையா? அதைத் தெரிந்துகொண்டால் மட்டுமே திட்டத்தை எப்படி மேம்படுத்தலாம் என்பதை நாம் கண்டறியமுடியும்.
என்று பிரெமிக்கா சொன்னார்.
இந்தியச் சமூகத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வோர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் அவர் பங்காற்றினார்.
தடுப்பூசி குறித்து எடுத்துரைக்கும் இருமொழி நிகழ்ச்சிகளில் பிரெமிக்கா மருத்துவ ரீதியான ஆலோசனையை வழங்கினார்.
இந்நிலையில் லீ குவான் இயூ உபகாரச்சம்பள விருது பெற்றதில் அவருக்கு அளவற்ற மகிழ்ச்சி.
சமுதாயத்துக்குத் திரும்பக்கொடுக்கும் உணர்வுக்கு இந்த விருது பெரிய ஊக்கமாய் இருப்பதாக அவர் சொன்னார்.