தீர்வை செலுத்தப்படாத 2,000 சிகரெட் பெட்டிகள் பறிமுதல்; இந்திய ஆடவர் கைது
Singapore Customs
This audio is generated by an AI tool.
யீஷூன் தொழிலியல் பூங்காவில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் தீர்வை செலுத்தப்படாத 2,000 சிகரெட் பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவைச் சேர்ந்த 33 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர்ச் சுங்கத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அவர்கள் கடந்த வியாழக்கிழமை (3 ஏப்ரல்) அதிரடிச் சோதனை நடத்தினர்.
தொழிலியல் பூங்காவில் நிறுத்தப்பட்டிருந்த லாரியில் சிகரெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.
லாரியை ஓட்டியதாக நம்பப்படும் ஆடவர் நண்பருக்கு உதவ சிகரெட்டுகளைச் சிங்கப்பூருக்குக் கொண்டுவந்ததாக அதிகாரிகள் கூறினர்.
ஆடவரின் நண்பர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிகரெட்டுகளின் தீர்வைக்கும் பொருள், சேவை வரிக்கும் மொத்தம் 216,000 வெள்ளிக்கும் அதிகமான தொகை செலுத்தப்பட்டிருக்கவேண்டும்.
இந்நிலையில் சட்ட விரோதமான சிகரெட்டுகளின் விற்பனையின் மூலம் கிடைத்ததாக நம்பப்படும் 10,150 வெள்ளி ரொக்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.