தடுப்பூசி போட்டுக்கொண்டதாய்ப் பொய்யாகப் பதிவுசெய்யுமாறு தாதியிடம் கோரிய சந்தேகத்தின் பேரில் ஆடவர் மீது குற்றச்சாட்டு
COVID-19 தடுப்பூசி போட்டுக்கொண்டதாய்த் தாதியைப் பொய்யாகப் பதிவுசெய்யும்படி கோரியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 26-ஆம் தேதி சுவா சூ காங் சமூக மன்றத்தில் அமைக்கப்பட்ட தடுப்பூசி நிலையத்தில் அந்தச் சம்பவம் நடந்தது.
34 வயது டான் லி மிங் கெல்வின் (Tan Li Ming Kelvin) என்ற ஆடவர், இரண்டாவது தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டியிருந்தது.
இருப்பினும் தடுப்பூசி போட்டுக்கொள்ள விருப்பம் இல்லாத அவர், தமக்குத் தடுப்பூசி போடப்பட்டதாய்ப் பதிவு செய்யும்படி தாதியிடம் கூறியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
டான், தாதிக்கு 50 வெள்ளி கையூட்டு கொடுக்க முனைந்ததாகவும், தாதி அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டதாகவும் நம்பப்படுகிறது.
டான் மீது ஊழல் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 100,000 வெள்ளி வரை அபராதமோ 5 ஆண்டு வரை சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.