Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பணிப்பெண் துன்புறுத்தப்பட்டு மரணம்: முன்னாள் காவல்துறை அதிகாரி குற்றவாளி எனத் தீர்ப்பு

வாசிப்புநேரம் -
பணிப்பெண் துன்புறுத்தப்பட்டு மரணம்: முன்னாள் காவல்துறை அதிகாரி குற்றவாளி எனத் தீர்ப்பு

(படங்கள்: CNA/Syamil Sapari, Facebook/Helping Hands for Migrant Workers, Singapore)

சிங்கப்பூரில் மியன்மாரைச் சேர்ந்த இல்லப் பணிப்பெண் சித்திரவதை செய்யப்பட்டு மரணமடைந்த சம்பவத்தில் முன்னாள் காவல்துறை அதிகாரி குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஸ்டாஃப் சார்ஜண்ட் கெவின் செல்வம் தம் முன்னாள் மனைவிக்கும் மாமியாருக்கும் உடந்தையாக இருந்து ஆதாரங்களை மறைத்தார் என்று அரசு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

பல மாதங்களாகத் துன்புறுத்தப்பட்டுவந்த 24 வயது பணிப்பெண் பியாங் காய் டோன் (Piang Ngaih Don) 2016ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

கெவின் செல்வம் வீட்டில் சில மாதங்கள் வேலை பார்த்தபோது அந்தப் பணிப்பெண் 38 கிலோ எடையை இழந்து, மரணம் அடையும்போது வெறும் 24 கிலோ எடை மட்டுமே கொண்டிருந்தார்.

பணிப்பெண்ணைத் தலைமுடியைப் பிடித்துத் தரைக்கு மேலே தூக்கிக் காயத்தை ஏற்படுத்தியது, அவருக்குத் தண்ணீரில் ஊற வைத்த இரண்டு ரொட்டித் துண்டுகளை மட்டுமே உணவாகக் கொடுத்துப் பட்டினி போட அவரது முன்னாள் மனைவிக்கு உடந்தையாய் இருந்தது ஆகிய 2 குற்றங்கள் கெவின் செல்வத்துக்கு எதிராக நிரூபிக்கப்பட்டன.

வீட்டிலிருந்த கண்காணிப்புக் கேமராவை அகற்றி ஆதாரத்தை மறைத்த குற்றமும் நிரூபிக்கப்பட்டது.

இந்த வழக்கில் 2021ஆம் ஆண்டு செல்வத்தின் முன்னாள் மனைவி காயத்திரிக்கு 30 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

காயத்திரியின் தாயார் பிரேமாவுக்கு 17 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

செல்வத்துக்கு வரும் ஜூலை 17ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்