சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
"உணவும் முக்கியம்" - உலகக் கிண்ண ரசிகர்களால் அதிகரித்திருக்கும் நள்ளிரவு உணவு விநியோகச் சேவை

(படம்: Pixabay)
விறுவிறுப்பாக இடம்பெறும் உலகக் கிண்ணக் காற்பந்தாட்டங்கள்...
அதை மும்முரமாகக் காணும் ரசிகர்கள்...
எங்கும் எழுந்து செல்ல நேரமில்லை... சில நேரங்களில் பசி எடுக்கலாம்... என்ன செய்வது? உணவு விநியோகச் செயலியைத் திறந்து தட்டினால் போதும்... உணவு தானாக வரும்.

"வேறு வழியில்லை... உணவு முக்கியம்... ஆட்டத்துக்கு இடையில் நள்ளிரவுக்குப் பின் வெளியே சென்று உணவு வாங்க விருப்பமில்லை."
அதனால் விநியோகச் சேவையை நாடுவதாகச் சொன்னார் தொடக்கக்கல்லூரி மாணவர் ஸாஹிர் அகமது.
"என் மகன்கள் இருவருடன் ஆட்டங்களைக் காண்கிறேன். விடுமுறைக் காலம்... போட்டி முடிந்து விடியற்காலையில் தான் தூங்குகிறோம்... அதற்குள் பசி எடுப்பதால் உணவை விநியோகச் சேவை மூலம் பெறுகிறோம்"
என்றார் திரு ராஜு செல்வநாதன்.
அதனால் உலகக் கிண்ணப் போட்டி நடைபெறும் இந்தக் காலக்கட்டத்தில் உணவு விநியோகச் சேவைக்கான தேவை அதிகரித்துள்ளது.
நிறுவனங்கள் என்ன சொல்கின்றன?
விவரங்களைத் திரட்டியது 'செய்தி'.

"பீட்ஸா, fries, கேக்குகள், பரோட்டா, டிம் சம் ஆகியவற்றுக்கான விநியோகம் நள்ளிரவில் அதிகமாக உள்ளது. "
என்கிறது Grab நிறுவனம்.
உலகக் கிண்ணப் போட்டி தொடங்கியதிலிருந்து நள்ளிரவு 12 மணிக்கும் விடியற்காலை 5மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் உணவு விநியோகம் அதிகரித்திருப்பதாக Grab தெரிவித்தது.

"கோவிட் நோய்ப்பரவல் காலத்தில் அதிகமானோர் உணவு விநியோகச் சேவைகளைப் பயன்படுத்தப் பழகிவிட்டனர். அதனால் அவர்களுக்குக் காற்பந்துப் போட்டிக் காலத்தில் அதை நாடுவது சுலபமாக உள்ளது."
என்றது foodpanda நிறுவனம்.
மேலும் 2018-உடன் ஒப்பிடுகையில் அதிகமான உணவகங்கள் சேவைக்குப் பதிந்துகொண்டிருப்பதையும் foodpanda சுட்டியது.

அதன் panda mart மூலம் நொறுக்குத் தீனி வாங்குவோர் எண்ணிக்கையும் சற்றே அதிகரித்திருப்பதாய் நிறுவனம் சொன்னது.
2018ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிக்காலத்துடன் ஒப்பிடும்போது இரவு வேளையில் இடம்பெறும் உணவு விநியோகங்கள் இரட்டிப்பாகியிருப்பதாக நிறுவனம் தெரிவித்தது.
Grab, foodpanda போன்ற விநியோகச் சேவை நிறுவனங்கள் இந்தச் சூழலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றன.
அவை பல்வேறு சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களை ஈர்க்கின்றன.
வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டி. அன்றும் விநியோகச் சேவை பன்மடங்கு அதிகரிக்கும் என்று நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.