12 ஆண்டுகளாகச் சட்டவிரோதப் பகுதிநேர வேலை - பணிப்பெண்ணுக்குச் சிறை
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் 12 ஆண்டுகளுக்கும் மேலாகச் சட்டவிரோதமாகப் பகுதிநேர வேலை பார்த்த வெளிநாட்டுப் பணிப்பெண்ணுக்கு 16 வாரச் சிறைத்தண்டனையும் 25,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளன.
பிலிப்பீன்ஸைச் சேர்ந்த 51 வயது மாயா கிலேரினா சான்டோஸ் டகாபான் (Maya Clarina Santos Tagapan) சட்டவிரோதமாகக் குறைந்தது 5 வீடுகளில் பகுதி நேரத் துப்புரவாளராகப் பணியாற்றினார்.
அதன் மூலம் அவர் சுமார் 296,000 வெள்ளி வருமானம் பெற்றார்.
அபராதத்தைச் செலுத்தவில்லை என்றால் அவர் கூடுதலாக 5 வாரச் சிறைத்தண்டனையை நிறைவேற்ற வேண்டும்.
முறையான வேலை அனுமதியின்றி வேலை செய்த ஒரு குற்றச்சாட்டையும் பதிவு செய்த இடத்தில் தங்காமல் வேலை அனுமதி விதிமுறையை மீறிய ஒரு குற்றச்சாட்டையும் அவர் ஒப்புக்கொண்டார்.
3ஆவதாக ஒரு குற்றச்சாட்டு கருத்தில் கொள்ளப்பட்டது.
2010ஆம் ஆண்டு மாயா தனக்கு வேலை அனுமதி பெற்றுத் தருமாறு ஜூடி கான் (Judy Gan) என்பவரைக் கேட்டார்.
47 வயது கான் ஒப்புக்கொண்டார்.
ஆனால் மாயா தனியாக வேறோர் இடத்தில் தங்கிக்கொண்டார்.
ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் கானின் வீட்டைச் சுத்தம் செய்தார். அதற்கு கான் தனியாக 90 வெள்ளியை மாயாவிற்குக் கொடுத்தார்.
கான் 300 வெள்ளி தீர்வையைத் செலுத்தினார். அதில் 200 வெள்ளியை மாயா திரும்பித் தந்துவிடுவார்.
மற்ற நாள்களில் மாயா வேறு வீடுகளில் பணிப்பெண் வேலையில் ஈடுபட்டார்.
அவர் மாதந்தோறும் சுமார் 2,000 வெள்ளி சம்பாதித்தார்.
2023ஆம் ஆண்டு மனிதவள அமைச்சு மாயாவை விசாரித்தது.
கான் மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
மாயாவிற்கு 2 ஆண்டுவரை சிறைத்தண்டனை, 20,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட்டிருக்கலாம்.