மியன்மார் பணிப்பெண் மரணம்- துன்புறுத்தலை மருத்துவர்கள் புகார் செய்யும் முறை மறுஆய்வு: மனிதவள அமைச்சு
இல்லப் பணிப்பெண்கள் துன்புறுத்தலுக்கு ஆளாவதாகச் சந்தேகிக்கும் மருத்துவர்கள் அது குறித்துப் புகார்செய்யும் கட்டமைப்பை மறுஆய்வு செய்யவுள்ளதாக மனிதவள அமைச்சர் ஜோசஃபின் தியோ இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

(படம்: Facebook/Helping Hands for Migrant Workers, Singapore)
இல்லப் பணிப்பெண்கள் துன்புறுத்தலுக்கு ஆளாவதாகச் சந்தேகிக்கும் மருத்துவர்கள் அது குறித்துப் புகார்செய்யும் கட்டமைப்பை மறுஆய்வு செய்யவுள்ளதாக மனிதவள அமைச்சர் ஜோசஃபின் தியோ இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கட்டாய மருத்துவப் பரிசோதனைகளுக்குச் செல்லவேண்டும்.
துன்புறுத்தப்பட்டு மாண்ட இல்லப் பணிப்பெண் பியாங் நகாய் டோன் (Piang Ngaih Don) 2016 இல் இரு முறை பரிசோதனைக்குச் சென்றிருக்கிறார். ஆனால் அப்போது அவர் துன்புறுத்தப்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டதாக அதிகாரிகளிடம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
மருத்துவர்கள் துன்புறுத்தலைப் புகார் செய்யும் கட்டமைப்பைச் சுகாதார அமைச்சு ஆராயவேண்டும் என்று கூறினார் அமைச்சர்.
மறுஆய்வுக்கு பின்னர் அது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.
பணிப்பெண்கள் துன்புறுத்தப்படுவதை தடுக்க பாதுகாப்பு நடைமுறைகள் இருப்பதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.
இல்லப் பணிப்பெண்ணுக்கு மரணத்தை விளைவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட முதலாளி காயத்திரி முருகையன் இதற்கு முன் 4 பணிப்பெண்களை வேலையில் அமர்த்தியதாகவும் அவர்கள் புகார் ஏதும் செய்யவில்லை என்றும் கூறப்பட்டது.
இல்லப் பணிப்பெண்கள் அனைவரின் நலனையும் கண்டறிய அவர்களைத் தொடர்புகொள்ளும் பணிகள் அதிகரிக்கப்படும் என்றார் அமைச்சர்.
அதற்கான வழிகளையும் கருத்துகளையும் வரவேற்பதாய் அவர் கூறினார்.