சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
"பொருள், சேவை வரி உயர்வைச் சமாளிக்க உதவ அரசாங்கம் தயார்.... இருப்பினும் சிலருக்குப் பாதிப்பு ஏற்படலாம்" - அரசியல் ஆய்வாளர்
சிங்கப்பூரில் அடுத்த ஆண்டும் அதற்கடுத்த ஆண்டும் பொருள், சேவை வரி அதிகரிக்கப்படவுள்ளது.
- 2023ஆம் ஆண்டில் அது 1 விழுக்காடு உயர்த்தப்பட்டு 8% ஆக இருக்கும்
- 2024ஆம் ஆண்டில் அது மேலும் 1 விழுக்காடு அதிகரிக்கப்பட்டு 9% ஆக இருக்கும்
அதுகுறித்து நேற்று தேசிய தினக் கூட்ட உரையில் பேசிய பிரதமர் லீ சியென் லூங், பொருள் சேவை வரி உயர்வைச் சமாளிக்கச் சிங்கப்பூரர்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்து தர அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரிவித்தார்.
பொருள், சேவை வரி அதிகரிப்பின் தாக்கம் என்ன? மேலும் தெரிந்துகொள்ள அரசியல் ஆய்வாளர் உஷா ராணியிடம் 'செய்தி' பேசியது.
அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம்
- உக்ரேனியப் போர்
- அண்டை நாடுகளின் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள்:
- மலேசியா - உயிர்க்கோழிகள்
- இந்தோனேசியா - செம்பனை எண்ணெய்
உலகளவிலான அரசியல் விவகாரங்களால் சில அத்தியாவசியப் பொருள்களின் விநியோகத்தில் தடங்கல் ஏற்படுகிறது.
அதனால் உணவு போன்ற அத்தியாவசியப் பொருள்களின் விலை ஏற்கனவே அதிகரித்துள்ளது என்பதைச் சுட்டினார் உஷா.
குறைந்த வருமானம் உள்ளவர்களுக்குப் பெரிய பாதிப்பு
அரசாங்கம் பொருள், சேவை வரி உயர்வைச் சமாளிக்க மக்களுக்குப் பற்றுச்சீட்டுகள் போன்ற பல்வேறு சலுகைகளையும் உதவிகளையும் வழங்குகிறது.
என்றபோதிலும், ஏற்கனவே உயர்ந்துள்ள அத்தியாவசியப் பொருள்களின் விலையுடன் கூடுதல் 2 விழுக்காடு பொருள், சேவை வரி, குறைந்த வருமானம் உள்ளவர்களைப் பெருமளவில் பாதிக்கக்கூடும் என்று உஷா கூறினார்.
அரசாங்கத்தின் தொலைநோக்கு, சமயோசிதத் திறமை
ஏற்றுமதித் தடை விதிக்கப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருள்களை வேறு எங்கிருந்து பெறலாம் என்று அரசாங்கம் மிக விரைவில் யோசித்து, மற்ற நட்பு நாடுகளுடன் திட்டமிட்டு அதற்கான தீர்வைக் கண்டது.
அத்துடன், நாடளவில், உலகளவில் ஏற்படக்கூடிய சிக்கல்களுக்கும் சவால்களுக்கும் ஏற்கனவே திட்டமிட்டு அவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கான, தீர்ப்பதற்கான முயற்சிகளை சிங்கப்பூர் அரசாங்கம் மேற்கொள்கிறது.
அரசாங்கத்தின் தொலைநோக்குச் சிந்தனை, சமயோசிதத் திறமை ஆகியவை பாராட்டுக்குரியவை என்கிறார் உஷா.