வீடுகளின் மாடங்களிலும் சன்னல் அருகிலும் புகைபிடிப்பதைத் தடைசெய்யப் பரிந்துரை
அடுக்குமாடி வீடுகளின் மாடங்களிலும் சன்னல் அருகிலும் புகைபிடிப்பதைத் தடை செய்யுமாறு நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சின் நாடாளுமன்றக் குழுவை வழிநடத்தும் திரு. லூயிஸ் இங் (Louis Ng) பரிந்துரைத்துள்ளார்.
(படம்:AFP/Eric Feferberg)
அடுக்குமாடி வீடுகளின் மாடங்களிலும் சன்னல் அருகிலும் புகைபிடிப்பதைத் தடை செய்யுமாறு நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சின் நாடாளுமன்றக் குழுவை வழிநடத்தும் திரு. லூயிஸ் இங் (Louis Ng) பரிந்துரைத்துள்ளார்.
புகைபிடிக்கும் பழக்கம் இல்லாதோர் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க அது உதவும்.
தேசியச் சுற்றுப்புற அமைப்பிடம் இவ்வாண்டின் முதல் 4 மாதங்களில், புகைபிடிப்பதன் தொடர்பில் 11,400 புகார்கள் செய்யப்பட்டன.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அது 20 விழுக்காடு அதிகம்.
அவற்றில் பல, குடியிருப்பாளர்கள் வீட்டிற்கு அருகிலோ வீட்டில் இருந்தவாறோ புகைபிடித்தது தொடர்பானவை என்று திரு. இங் கூறினார்.
கிருமித்தொற்றுச் சூழலில் பலர் வீட்டில் இருக்கும் வேளையில், தங்கள் வீடுகளுக்குள் சிகரெட் புகை வருவதாகக் கூடுதலானோர் புகார் அளித்துள்ளனர்.
வீட்டு மாடங்களிலும் சன்னல் அருகிலும் புகைபிடிப்போரைக் கண்டறிய, குடியிருப்புக் கட்டடங்களிலிருந்து குப்பை போடும் நபர்களைப் பிடிக்கப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம் என்றார் திரு. இங்.
ஆனால், தனிநபர் அந்தரங்கம் போன்ற அம்சங்களைக் கவனத்தில் கொள்ளவேண்டும் என்பதை நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சுக்கான மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் (Amy Khor) சுட்டினார்.
அரசாங்கம் அதன் தொடர்பில் மும்முனை அணுகுமுறையைக் கையாளும். மக்களிடையே சமூகப் பொறுப்புணர்வை அதிகரித்தல், அண்டைவீட்டுக்காரர்கள் சிக்கல்களை பேசித் தீர்த்துக்கொள்ள உதவும் கூடுதல் வழிமுறைகளைக் கண்டறிதல், அத்தகைய பிரச்சினைகளை மேம்பட்ட முறையில் கையாள்வது தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளுதல் ஆகிய வழிகளில் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்றார் டாக்டர் கோர்.