Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

"மாட்டுவண்டியில் வந்தனர் வாடிக்கையாளர்கள்" - 100 ஆண்டுகள் தொட்ட ஆனந்தபவனின் தொடக்க காலம்

வாசிப்புநேரம் -
ஆனந்தபவன்.....சிங்கப்பூரில் பலருக்கும் தெரிந்த சைவ உணவகம்.

உணவகத்துக்கு இன்று வயது 100.

அதன் தொடக்க காலம் எப்படி இருந்தது? பொருள்கள் எங்கிருந்து வரவழைக்கப்பட்டன? 'செய்தி'யிடம் பகிர்ந்துகொண்டார் உணவக மேலாளர் குருசுவாமி முருகேசன்.
 
வரலாறு

✨ 1924இல் தொடங்கியது
✨ முதல் உணவகம் - சிலிகி (Selegie) ரோட்டில்
✨ தோற்றுவித்தவர் - திரு குழந்தைவேலு
✨ இவர் தமிழகத்தின் நாமக்கல் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்
 
(திரு குழந்தைவேலு)
தொடக்க காலத்தில் ஆனந்தபவனில் தென்னிந்திய உணவு வகைகள் மட்டுமே விற்கப்பட்டன.
 
உணவு பரிமாறவும் பொட்டலமிடவும் வாழை இலைகள் பயன்படுத்தப்பட்டதாகத் திரு குருசுவாமி சொன்னார். அவை எளிதாகவும் மலிவான விலையிலும் கிடைத்தன.

உணவின் விலை காலணா, அரையணா ஓரணா என்று இருந்ததாக அவர் சொன்னார்.

(குறிப்பு: ஓரணா - 6 காசு)
 
"மக்களின் அன்றாட வருமானம் சுமார் இரண்டணா (12 காசு) இருக்கும். அதில் ஓரணாவைச் செலவிட்டு காலை, மதியம், இரவு என 3 வேளை உணவை வாங்கி உண்ணக்கூடிய சூழ்நிலை இருந்தது,"
என்றார் திரு குருசுவாமி.
பொருள்கள் எங்கிருந்து வரும்?

"அந்தக் காலத்தில் சிங்கப்பூரில் பெரிய சந்தைகள் இல்லை. இந்தியாவிலிருந்து கொண்டுவருவதென்றால் 4, 5 மாதங்கள் ஆகும். எனவே உணவகத்துக்குத் தேவையான பொருள்கள் பெரும்பாலும் மலேசியாவில் இருந்துதான் கொண்டுவரப்பட்டன," என்றார் திரு குருசுவாமி.

அவை தோணியில் எடுத்துவரப்படும். மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குக் கடல் வழியாக அந்தப் பொருள்களை எடுத்துவர குறைந்தது அரைமணி நேரம் பிடிக்கும் என்றார் அவர்.
தேவைக்கேற்ப சமைக்கப்படும்

👨‍🍳 அன்றாடத் தேவைக்கேற்ப உணவு சமைக்கப்படும்

👨‍🍳 ஓர் உணவு தீர்ந்தால் தீர்ந்ததுதான்.

👨‍🍳 சில காய்கறிகளை மட்டும் வைத்து ஓரிரு கூட்டுப்பொறியல் செய்யப்படும்.

👨‍🍳 பொருள் வாங்கி வருபவர்களே உணவகத்தை நடத்த உதவினர்.

👨‍🍳 நடத்துநர்களே சமையல் வேலையைக் குடும்பமாகச் செய்தார்கள்.

👨‍🍳 விமானப் போக்குவரத்து தொடங்கிய பிறகே இந்தியாவிலிருந்து சமையல்காரர்கள் அழைத்துவரப்பட்டனர்
 
மாட்டுவண்டியில் வந்த வாடிக்கையாளர்கள்

 
"சிங்கப்பூரில் அன்றைய நாளில் சிராங்கூனில் கல் ரோடுதான் இருக்கும். மாட்டு வண்டிதான் மக்களின் முக்கிய போக்குவரத்தாக இருந்தது. அதில்தான் வாடிக்கையாளர்கள் கடைக்கு வந்துபோவார்கள்."
"பெரிய கடைத்தெருக்கள் எதுவும் இல்லாததால் வீட்டுச் சமையலுக்குப் பொருள்களை வாங்குவதில் பெண்களுக்குச் சிரமங்கள் இருந்தன.எனவே அவர்களில் பலர் உணவகத்தில் உண்பது வழக்கம்."
பாரம்பரிய உணவு தவிர்த்து இனிப்பு வகைகளும் பிரபலம்

அந்தக் காலத்தில் பொங்கல், உப்புமா, வடை, பூரி, தோசை, சாப்பாடு ஆகியவை தவிர்த்து இனிப்புப் பலகாரங்களும் விற்கப்பட்டன.
 
"செயற்கை வண்ணம் இருக்காது. கருப்பட்டியால் தயாரிக்கப்படும் அதிரசம், நெய்யப்பம், இனிப்பு அப்பம் ஆகியவை மிகவும் பிரபலம்,"
என்றார் திரு குருசுவாமி.

நூறாண்டுகளைக் கடந்து விட்டாலும் பழைய நினைவுகள் எதுவும் மனத்திலிருந்து நீங்கவில்லை என்கிறார் இவர்.
 
காலத்துக்கு ஏற்ற வகையில் மாற்றங்களைச் செய்துகொள்வதே எந்தத் தொழிலுக்கும் வெற்றியைத் தேடித் தரும் என்று அழுத்தமாகச் சொன்னார் திரு. குருசுவாமி.
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்