சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
மலேசியக் கோழி ஏற்றுமதி நிறுத்தத்தைச் சமாளிக்கத் தயாராகும் இந்திய உணவகங்கள்
சிங்கப்பூரில் பெரும்பாலும் அதிகம் விரும்பி உண்ணப்படும் அசைவ உணவுவகைகளில் கோழியும் ஒன்று.
குறிப்பாக இந்திய உணவுவகைகளில் கோழிக் குழம்பு, கோழி பிரியாணி, கோழிக் குருமா, கோழிப் பிரட்டல், பொரித்த கோழி என்று எண்ணற்ற கோழிச் சமையல் வகைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
மலேசியா வரும் ஜூன் முதலாம் தேதியிலிருந்து உயிருள்ள கோழிகளைப் பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
அத்தகைய நிலையில் சிங்கப்பூரிலுள்ள இந்திய உணவகங்கள் பாதிக்கப்படுமா?
அறிந்துவந்தது செய்தி...
"உயிர்க் கோழிகள் மலேசியாவிலிருந்து தருவிக்கப்பட்டு சிங்கப்பூரிலுள்ள பல உணவகங்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன"
என்கிறார் காயத்திரி உணவகத்தின் உரிமையாளர் திரு சண்முகம்.
மலேசியா அதன் கோழி ஏற்றுமதிகளை நிறுத்தும்போது பிரேசில், அமெரிக்கா ஆகியவற்றிலிருந்து இறக்குமதியாகும் உறையவைக்கப்பட்ட கோழிகளையே பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று அவர் விளக்கினார்.
"உறையவைக்கப்பட்ட கோழியின் சுவை உயிர்க் கோழியைவிட அவ்வளவு நன்றாக இருக்காது. அதனால் நமது சமையலில் கூடுதல் இஞ்சி, பூண்டு உள்ளிட்டவற்றைச் சேர்த்துச் சுவையை அதிகரிக்கிறோம்"
என்றார் திரு சண்முகம்.
"SARS நோய்ப்பரவல் (2003) காலத்தில் மலேசியா அதன் கோழி ஏற்றுமதிகளை நிறுத்தியபோது கற்றுக்கொண்ட உத்திகளை இப்போது பயன்படுத்துகிறோம்"
என்றும் அவர் பகிர்ந்தார்.
"இதுவரை உறையவைக்கப்பட்ட கோழியைப் பயன்படுத்தியதில்லை. இப்போது வேறு வழியில்லை; உறையவைக்கப்பட்ட கோழியைத்தான் பயன்படுத்தவேண்டும்."
என்கிறார் Grace's Pot உணவகத்தின் உரிமையாளர் திரு சுரேஷ்.
"இன்றுகூட கோழி விலை கிலோவுக்கு சுமார் 50 காசு அதிகரித்தது. இப்படியே போய்க்கொண்டிருந்தால் வாடிக்கையாளர்களை இழக்கநேரிடலாம்."
என்று அவர் கவலை தெரிவித்தார்.
விலையேற்றத்தைச் சமாளிக்கக் கோழி உணவுவகைகளின் விலையை ஏற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று உணவகங்கள் கூறுகின்றன.