இறக்குமதி செய்யப்படும் குழந்தைப் பால் பொருள்கள் - எப்படிச் சோதிக்கப்படுகின்றன?
(படம்: Envato Elements)
This audio is generated by an AI tool.
2019ஆம் ஆண்டுக்கும் 2025க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் மாதந்தோறும் சராசரியாக எட்டு குழந்தைப் பால் பொருள்கள் மாசுகளுக்காகச் சோதிக்கப்பட்டதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ கூறியுள்ளார்.
எந்தவொரு பால் பொருளும் மீட்டுக்கொள்ளப்படவில்லை.
நாடாளுமன்றக் கேள்விக்கான பதிலில் அவர் விவரங்களை வெளியிட்டார்.
கடந்த ஜனவரி மாதம் குழந்தைப் பால் பொருள்களில் செருலைட் (Cereulide) நச்சுப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
அதற்கு முன் நடத்தப்பட்ட சோதனைகள் செருலைட்டை உள்ளடக்கவில்லை; ஏனெனில் அது பால் பொருள்களில் பொதுவாகத் தென்படாத ஒரு பொருள் என்றார் திருவாட்டி ஃபூ.
குழந்தைப் பால் பொருள்களில் பரிந்துரைக்கப்பட்ட செருலைட் அளவு குறித்து அனைத்துலக உணவுத்தர நிறுவனமான Codex Alimentarius தகவல் ஏதும் வெளியிடவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர் இங் ஷி சுவான் (Ng Shi Xuan) கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் பதில் சொன்னார்.
இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து சிங்கப்பூர் உணவு அமைப்பு (SFA) செருலைட் சோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளது; பாதிக்கப்பட்ட பொருள்களை மீட்டுள்ளது.
குழந்தைப் பால் பொருள்களின் சோதனை முறைகளை மேம்படுத்தி நிலவரத்தை அணுக்கமாகக் கண்காணிக்கப் போவதாகவும் திருவாட்டி ஃபூ கூறினார்.