"ஆட்குறைப்பு செய்யவிருப்பதாக நிறுவனங்கள் முன்கூட்டியே மனிதவள அமைச்சிடம் சொல்லத் தேவையில்லை"
படம்: Unsplash/Mimi Thian
நிறுவனங்கள், ஆட்குறைப்பு செய்யவிருப்பதாக முன்கூட்டியே மனிதவள அமைச்சிடம் தகவல் அளிக்கத் தேவையில்லை என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் (Tan See Leng) கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் ஆட்குறைப்பு பற்றி எத்தனை நிறுவனங்கள் முன்கூட்டியே மனிதவள அமைச்சிடம் தெரியப்படுத்தத் தவறின என்று இன்று (4 நவம்பர்) நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்து.
அவ்வாறு செய்யத் தவறிய நிறுவனங்களுக்கு எதிராக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்றும் கேட்கப்பட்டது.
அமைச்சர் டான் அதற்கு எழுத்துபூர்வ பதில் தந்தார்.
செப்டம்பர் மாதத் தகவலின்படி Agoda நிறுவனம், ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் ஆட்குறைப்புச் செய்திருந்தது.
அது சுமார் 50 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்தது.
ஊழியர்கள் அதிகாரிகளிடம் புகார் அளிக்கக்கூடாது என்று இழப்பீட்டு நிபந்தனைகளில் இருந்ததாக CNA சொன்னது.
அவ்வாறு செய்வோரின் இழப்பீட்டு உரிமைகள்
ரத்து செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதனை விசாரிக்கும் மனிதவள அமைச்சு, Agoda
கட்டாய ஆட்குறைப்பு அறிவிப்பு குறித்த விதிமுறையை மீறவில்லை என்று சொன்னது.
அந்த நிறுவனம் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்குத் தகவல் தந்த பிறகு அது குறித்து 5 வேலை நாளுக்குள் மனிதவள அமைச்சிடம் கட்டாய ஆட்குறைப்பு அறிவிப்பைச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதிமுறையை நிறைவேற்றியதாக அமைச்சர் டான் சொன்னார்.
ஆட்குறைப்புச் செய்வதற்குமுன் முதலாளிகள் ஆட்குறைப்பு அறிவிப்பை அமைச்சிடம் சமர்ப்பிக்கத் தேவையில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
ஆட்குறைப்பு பற்றி முன்கூட்டி தகவல்தர வேண்டும் என்ற பரிந்துரையைப் பரிசீலிக்குமாறு தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் கேட்டுள்ளது.