ஜூ செங் வீட்டில் தீ - வேண்டுமென்றே மூட்டப்பட்ட சந்தேகம் - ஆடவர் கைது
படங்கள்: Facebook/Ambrose Lee, SCDF
பார்ட்லி (Bartley) வட்டாரத்திலுள்ள கழக வீட்டில் வேண்டுமென்றே தீ மூட்டிய சந்தேகத்தில் 44 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜூ செங் (Joo Seng) ரோடு புளோக் 14இல் தீ மூண்டதாக இரவு 9.40 மணி அளவில் தகவல் கிடைத்ததாய் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
18ஆவது மாடியில் உள்ள வீட்டில் தீ மோசமாகப் பரவியதாக அது சொன்னது.
தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் இரண்டு குழாய்களைப் பயன்படுத்தித் தீ அணைக்கப்பட்டது.
தீயணைப்பாளர்கள் சம்பவ இடத்துக்கு வருவதற்கு முன்னரே மூன்று பேர் பாதுகாப்பாக வெளியேறியதாகக் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
இரு தீயணைப்பாளர்கள் உட்பட 10 பேர் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
அவர்களில் எட்டுப் பேர் புகையைச் சுவாசித்ததாகக் குடிமைத் தற்காப்புப் படை சொன்னது.
முதற்கட்ட விசாரணையில் தீ வேண்டுமென்றே மூட்டப்பட்டிருக்கலாம் என்பது தெரியவந்திருப்பதாக அது கூறியது.
சம்பவ இடத்திலேயே சந்தேக நபரைக் கைது செய்ததாக சிங்கப்பூர்க் காவல்துறை CNA ஊடகத்திடம் கூறியது.
விசாரணை நடக்கிறது.