இழந்த வாக்குகளை மீண்டும் பெறுவதற்கு மக்கள் செயல் கட்சி நடவடிக்கைகள் எடுக்கும்: அமைச்சர் லாரன்ஸ் வோங்
இழந்த வாக்குகளை மீண்டும் பெறுவதற்கு மக்கள் செயல் கட்சி நடவடிக்கைகள் எடுக்கும்: அமைச்சர் லாரன்ஸ் வோங்
மக்கள் செயல் கட்சி நடுத்தர வயது வாக்காளர்களின் ஆதரவைப் பெற கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
பொதுத்தேர்தலுக்குப் பிந்திய விமர்சனக் கட்டுரைகளில் பல, மக்கள் செயல் கட்சியை இளையர்கள் கைவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தன.
ஆனால் இளம் வாக்காளர்கள் உள்ள பல தொகுதிகளில் கட்சிக்கு நல்ல ஆதரவு கிடைத்திருப்பதை அமைச்சர் சுட்டினார்.
முதன்முறையாக வாக்களித்த 21க்கும் 24 வயதுக்கும் இடைப்பட்டவர்களின் விகிதம், வாக்களிக்கத் தகுதிபெற்றோரில் 10 விழுக்காட்டிற்கும் குறைவு என்பதையும் அமைச்சர் வோங் குறிப்பிட்டார்.
40களிலும் 50களிலும், 60களிலும் உள்ள சிலரின் ஆதரவைக் கட்சி இழந்துள்ளதாக அவர் சொன்னார்.
பொருளியல் பாதிப்பு, வருவாய் இழப்பு, குறைவான சம்பளம் போன்றவை அதற்குக் காரணங்களாக இருக்கலாம் என்றார் அமைச்சர்.
தனியார், கூட்டுரிமை வீடுகளில் வசிப்போரின் ஆதரவு குறைந்திருப்பதையும் அவர் சுட்டினார்.
இழந்த வாக்குகளை மீண்டும் பெறுவதற்குக் கட்சி எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் பற்றியும் அமைச்சர் கூறினார்.
இன்னும் அதிகமான இளம் வாக்காளர்களை ஈர்ப்பதற்கும் பொருளியல் பாதிப்புக்கு ஆளான 40க்கும் 50 வயதிற்கும் இடைப்பட்டோரின் கவலைகளைப் போக்குவதற்கும் என்னென்ன செய்யவேண்டும் என்பதையும் கட்சி ஆராய வேண்டும் என்றார் திரு. வோங்.