மியன்மார் பணிப்பெண் மரணம்- சிறைக்காலத்தைக் குறைக்கக் கோரிய பெண்ணின் மேல்முறையீடு நிராகரிப்பு

(படம்: Facebook/Helping Hands for Migrant Workers, Singapore and Nisha Karyn)
மியன்மார் பணிப்பெண்ணைத் துன்புறுத்தி மரணம் விளைவித்ததற்கு விதிக்கப்பட்ட தண்டனைக்காலத்தைக் குறைக்கக் கோரிய பெண்ணின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்பில் 42 வயது காயத்திரி முருகையனுக்குக் கடந்த வருடம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனைக்காலத்தைக் கிட்டத்தட்ட பாதியாகக் குறைப்பதற்கு அவர் மேல்முறையீடு செய்திருந்தார்.
தமக்குள்ள மனநலப் பிரச்சினை கூடுதலான சிரமத்தை ஏற்படுத்தக்கூடும் என்றுகூறிய அவர், கருணை காட்டும்படி வேண்டினார்.
இருப்பினும், அவரின் கடுமையான குற்றங்களைக் கருத்தில்கொள்ளும்போது கருணை அளிப்பது நியாயமல்ல என்று நீதிபதிக் குழு சொன்னது.
அவரின் குற்றங்களைப் பொதுமக்கள் கண்டித்ததையும் அது சுட்டியது.
அடுத்து, பிரதமர் லீ சியென் லூங்கிடம் மேல்முறையீடு செய்யவிருப்பதாகக் காயத்திரி தற்போது கூறியுள்ளார்.
பியாங் ஙாய் டோன் (Piang Ngaih Don) எனும் 24 வயதுப் பணிப்பெண் 14 மாதத் துன்புறுத்தலைத் தொடர்ந்து, 2016ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி மாண்டார்.
உயிரிழிப்பதற்கு முன்பு சில நாள்களுக்கு, அவருக்கு உணவு கொடுக்கப்படவில்லை என்றும் இரவில் சன்னல் கம்பிகளுடன் அவர் கட்டப்பட்டார் என்றும் கூறப்பட்டது.
குப்பைத் தொட்டியிலிருந்து உணவு தேட முயன்றால், அப்போதும் அவர் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
மாண்டபோது, பணிப்பெண்ணின் எடை 24 கிலோகிராம் மட்டுமே.