50 நிமிடத்தில் 50,000 மோசடி அழைப்புகள்... $1.6 மில்லியன் இழப்பு
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் பல கருவிகளைக் கொண்டு பல்லாயிரம் மோசடி அழைப்புகளைச் செய்த மலேசிய ஆடவருக்கு 5 ஆண்டு, 3 மாதச் சிறைத்தண்டனையும் 895 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
42 வயது சொங் வேய் ஹாவ் (Chong Wei Hao) பொய்த் தகவல்கள் அளித்து சிங்கப்பூர்க் குடிமக்களை ஏமாற்றிய ஒரு குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
மின்சாரத் தொழில்நுட்பரான அவர் "NASA" எனும் மோசடி கும்பலால் வேலைக்கு எடுக்கப்பட்டார்.
அவர் சாய் சீயில் ஒரு வாடகை வீட்டில் தானியக்க முறையில் மோசடி அழைப்புகளைச் செய்யப் பல கருவிகளை அமைத்தார்.
அதன்வழி அவர் சுமார் 18,000 தொலைபேசி எண்களிலிருந்து 50 நிமிடத்தில் 50,000 மோசடி அழைப்புகளைச் செய்தார்.
அவற்றில் 42 சம்பவங்கள் குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
அரசாங்க அமைப்புகள் அல்லது நிதிக் கழகங்களிலிருந்து பேசுவதுபோல் அழைப்பில் குரல் பதிவு செய்யப்பட்டிருந்தது.
3 வாரத்தில் மோசடிக்கு ஆளானோர் 1.6 மில்லியனுக்கும் அதிகமான தொகையை இழந்தனர்.
அந்தப் பணத்தை மீட்க முடியவில்லை.
சென்ற ஆண்டு (2025) ஏப்ரலில் சம்பவம் நடந்தது.
வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அந்த வீட்டைச் சோதனையிட்டனர்.
9 கருவிகள், கண்காணிப்புக் கேமராக்கள் உள்ளிட்ட சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அப்போது சோங் வீட்டில் இல்லை. அவர் மலேசியாவிற்குத் திரும்பிவிட்டார்.
அவர் பின்னர் ஜொகூர் பாருவில் கைது செய்யப்பட்டு சிங்கப்பூர்க் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அவருக்கு 10 ஆண்டுவரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.