ஆண் வேலையா? நாங்களும் செய்வோம்! - விடாமுயற்சி இருந்தால் முடியும் என்று கூறும் தீயணைப்பாளர்
"அம்மா, நீங்கள் என் ஹீரோ!" என்ற வார்த்தைகளைக் கேட்கும்போதெல்லாம், வேலையில் தொடர்ந்து நிலைத்திருக்கவும் மேலும் சிறப்பாகப் பணியாற்றவும் தூண்டுதல் பெறுவதாகக் கூறுகிறார், தீயணைப்பு வீராங்கனை கங்காதேவி.
#CelebratingSGWomen
"அம்மா, நீங்கள் என் ஹீரோ!" என்ற வார்த்தைகளைக் கேட்கும்போதெல்லாம், வேலையில் தொடர்ந்து நிலைத்திருக்கவும் மேலும் சிறப்பாகப் பணியாற்றவும் தூண்டுதல் பெறுவதாகக் கூறுகிறார், தீயணைப்பு வீராங்கனை கங்காதேவி.
சிங்கப்பூர்ப் பெண்களைக் கொண்டாடும் இந்த ஆண்டு, ஆண்கள் அதிகம் பணிபுரிவதாகக் கருதப்படும் துறைகளில் கால் பதித்த பெண்களைச் சந்திக்கிறது, 'செய்தி'.
35 வயதான கங்காதேவி, 14 ஆண்டாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையில் பணியாற்றுகிறார்.
மெல்ல மெல்ல முன்னேறிய அவர், தற்போது லெஃப்டனன்ட் பதவிக்கு உயர்ந்துள்ளார்.
அண்மையில் குடிமைத் தற்காப்புப் படையின் ரோட்டா தளபதிப் பயிற்சியில் 'அறிவாற்றலில் சிறந்தவர்' என்ற விருதையும் கங்காதேவி பெற்றார்.
(படம்: SCDF)
ரோட்டா தளபதியாக, தீயணைப்பு நிலையத்தில் இவரின் பணி, வேலை நாள்களில் 24 மணி நேரம் நீடிக்கக்கூடியது.
கட்டடங்களுக்குள்ளேயும் கார்களுக்குள்ளேயும் தீப்பற்றியதாக உதவி கோரி அழைப்பு வந்தால், உடனடியாக விரையவேண்டும்....
விபத்தில் சிக்கியவர்களை மீட்கவேண்டும்....
எதற்கு இந்த ஆபத்தான வேலை? இது ஆண்கள் செய்யவேண்டிய வேலை... நல்ல வேலை கிடைத்ததா, திருமணம் செய்துகொண்டோமா, குழந்தை பெற்றெடுத்தோமா என்று இருக்கலாமே!,
என்று சுற்றி இருந்தவர்கள் பலர் தொடக்கத்தில் கூறியதை நினைவுகூர்ந்தார் கங்காதேவி.
அவருக்கே அச்சமாகத்தான் இருந்தது.
தொடக்கத்தில் சுற்றி ஆண்கள் மட்டுமே இருந்தனர். தண்ணீர் பாய்ச்சும் குழாய்களை ஏந்தி ஓடினர்... என்னால் முடியுமா என்று அஞ்சினேன். நிறைய சவால்கள் இருந்தன. பல படிகளை ஏறவேண்டியிருந்தது.
(படம்: SCDF)
முன்னேறும் முயற்சியில் தமக்குப் பக்கபலமாக இருப்பது, குடிமைத் தற்காப்புப் படையில் இணைந்து வேலைசெய்யும் தமது கணவரும் இரு பிள்ளைகளும்தான் என்றார், கங்காதேவி.
என் பிள்ளைகள் எனக்கு அதிகம் ஊக்கம் அளிப்பதுண்டு. 'உங்களால் இந்த வேலையைச் செய்யமுடியும்..' குடும்பத்தாரிடம் உள்ள புரிந்துணர்வு இருந்ததால்தான் இவ்வளவு தூரம் வரமுடிந்தது,
என்று அவர் சொன்னார்.
வேலையில் ஆண் பெண் வித்தியாசம் இல்லை என்றார், அவர்.
ஆண்கள் செய்வதைப் பெண்களும் செய்யமுடியும். பலம் மட்டும் தேவையில்லை, அறிவும் தேவை. பெண்களுக்கு அது நிச்சயம் உண்டு. சுலபமல்ல...விடாமுயற்சி இருந்தால் படிப்படியாக முன்னேறமுடியும்,
என்று கங்காதேவி தெரிவித்தார்.