மண்ணெண்ணெய் ஊற்றி அண்டை வீட்டாரின் கதவிற்குத் தீ வைத்த நபர் மீது குற்றஞ்சாட்டப்படும்
அண்டை வீட்டுக்காரரின் கதவிற்குத் தீ வைத்த 49 வயது ஆடவர் மீது இன்று (9 மே) குற்றஞ்சாட்டப்படும் என்று காவல்துறை நேற்று (8 மே) தெரிவித்தது.
தோ பாயோவில் எண். 31 லோரோங் 5இல் (31 Lorong 5 Toa Payoh) ஏற்பட்ட தீ விபத்துக் குறித்து நேற்று நள்ளிரவு காவல்துறைக்குப் புகார் அளிக்கப்பட்டது.
அண்டை வீட்டுக்காரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்தச் சந்தேக நபர், பிறகு அவரின் வீட்டிற்குச் சென்றதாகக் கூறப்பட்டது.
அவரின் வீட்டு வாசலில் மண்ணெண்ணெயை ஊற்றிய அந்த நபர், பின்னர் அவரின் கதவிற்குத் தீ வைத்ததாகக் காவல்துறை கூறியது.
தீ அணைக்கப்பட்டதாகவும் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
சந்தேக நபர் அதே நாளில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.
வீட்டை அழிக்கும் நோக்கத்துடன் தீ மூட்டித் தீங்கு ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்படும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் அல்லது 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.