சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
'யாரும் முகக்கவசம் போடாவிட்டால் என்ன? நான் தொடர்ந்து அணிவேன்'
சிங்கப்பூரில் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து (13 பிப்ரவரி) முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை.
பொதுப் போக்குவரத்திலும் உட்புறச் சுகாதாரப் பராமரிப்பு, இல்லப் பராமரிப்புச் சூழல்களிலும் முகக்கவசம் அணியும் நடைமுறை நீக்கப்படும்.
புதிய நடைமுறை குறித்துப் பலரிடம் மாறுபட்ட கருத்து உள்ளது.
இளையர்கள் சிலர் புதிய நடைமுறையை வரவேற்றனர்.
😷"இனி உதட்டுச் சாயம் எதிலும் படியாது. அப்படியே இருக்கும். இப்போதுதான் மகிழ்ச்சி,"
-பிரித்தி, 22
தங்களைப் போல் பலரும் முகக்கவசம் அணிவதை நிறுத்திவிடுவார்கள் என்று சிலர் கூறினர்.
😷"முகக்கவசம் அணிந்தாலே மிகவும் சூடாக இருக்கும். அதுவும் பொதுப் போக்குவரத்தில் போடுவதற்காகவே முகக்கவசத்தைக் கொண்டுசெல்வது வசதியாக இல்லை,"
- பிரித்திகா, 21
😷"நான் முகக்கவசம் அணியும்போதெல்லாம் மூக்குக் கண்ணாடி மீது ஆவி படிந்து பார்வையை மறைத்துவிடும். குடும்பத்தில் என் கணவர் மட்டுமே முகக்கவசம் அணிகிறார். அவருக்கு COVID-19 தொற்றவில்லை. அவர் தொடர்ந்து சிறிதுகாலம் முகக்கவசம் அணிவார் என்று எண்ணுகிறேன்,"
- ஷோபனா, 42
சிலரோ பொதுப் போக்குவரத்திலும் கூட்டமான சில இடங்களிலும் முகக்கவசம் அணியவிருப்பதாகக் கூறினர்.
😷"எப்போதும் போடத் தேவையில்லை. ஆனால் சளிக்காய்ச்சல் இருக்கும்போது போட்டுக்கொள்வது சிறந்தது. எனக்கு முகக்கவசம் அணியும்போது சுவாசிப்பது சிரமமாக இருக்கும். கூட்டமான இடங்களில் மட்டும் அணிவேன்,"
- சிவரஞ்சினி, 42
😷"குறிப்பாக உச்ச நேரங்களில் முகக்கவசம் அணிவது சிறந்தது. யாருக்கு என்ன இருக்குமென யாருக்குத் தெரியும்? என்னுடைய மகள் பள்ளிக்குச் செல்லும்போதெல்லாம் பேருந்து கூட்டமாக இருக்கும். அவளை அணியும்படி கூறுவேன்."
- தீபலட்சுமி, 41
எப்போதும் முகக்கவசம் அணியும் மூத்தோர் சிலர் அதைத் தொடர்ந்து அணியவிருப்பதாகக் கூறினர்.
😷"'யாரும் போடாவிட்டால் என்ன? எனக்குக் கவலை இல்லை. நான் தொடர்ந்து முகக்கவசம் அணிவேன். என்னுடைய சுகாதாரத்தை நான்தான் பார்த்துக்கொள்ளவேண்டும். என் குடும்பமே அதை அணிகிறது. தொடக்கத்தில் போடுவது சிரமமாக இருந்தது. இப்போது போடாமல் இருப்பதே மிகவும் சிரமம்,"
- மேரி பேபி, 73
பொதுப் போக்குவரத்தில் முகக்கவசம் அணிவதைப் பலர் நிறுத்திவிடுவார்கள் என்று எண்ணிச் சிலர் அச்சம் தெரிவித்தனர்.
😷"கொஞ்சம் பயமாக உள்ளது. பேருந்திலும் ரயிலிலும் அனைவரும் நெருக்கமாக இருப்பார்கள். சிலர் இருமுவதுண்டு. வாயை மூடிக்கொள்வதும் இல்லை. வயதானவர்கள் கவனமாக இருக்கவேண்டும். 4 முறை தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் எனக்கு COVID-19 ஏற்பட்டது,"
- ராணி, 72
பொதுமக்கள் குறிப்பாக மூத்தோரும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்போரும் கூட்டமான இடங்களில் முகக்கவசம் அணியுமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர்.