சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
மகிழ்ச்சி, உணர்ச்சி, நெகிழ்ச்சி... ஈராண்டு இடைவெளிக்குப் பிறகு சந்தித்த உறவுகள்...
கிருமிப்பரவல் சூழல், பலரின் வாழ்க்கையைச் சூறாவளியைப் போல் சுழலச் செய்து தலைகீழாக்கியுள்ளது. மிக இக்கட்டான காலக்கட்டத்தில் சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் பலரும் அவர்களின் குடும்பத்தினரைக் காண முடியாத நிலை ஏற்பட்டது.
ஈராண்டு காலத்துக்குப் பின் மீண்டும் திறந்தன எல்லைகள். வெளிநாட்டுக்குச் சென்று குடும்பத்தினரைச் சந்தித்த சிலர் அவர்களின் உணர்வுகளைச் 'செய்தி'யுடன் பகிர்ந்தனர்.
மனைவி, பிள்ளைகளைக் காணாமல் தவித்துப்போனேன்
என்று மனம் நெகிழச் சொன்னார் திரு. சுப்பிரமணியம்.
அவர்களை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகச் சந்திக்கவில்லை என்றும் அவரது மூத்த மகனின் பள்ளிப் பரிசளிப்பு விழாவுக்குச் செல்ல முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அண்மையில் மலேசியாவுக்குச் சென்ற அவர், அவரின் இரு பிள்ளைகளையும் நீண்ட நேரம் கட்டியணைத்துக் கொண்டாராம்...
அவர்களை நீண்ட நேரமாக விடவே இல்லை... கைகள் மரத்துப் போயின... அப்போதும் கட்டியணைத்தேன்
என்றார் அவர்.
இந்த நிலை வேறு யாருக்கும் வரக்கூடாது
என்கிறார் திரு. முகமது பாருக்.
56 வயதான அவர், தமது மனைவியை ஈராண்டுக்குப் பின் இந்தியாவுக்குச் சென்று சந்தித்தார்.
அவர்களுக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். பிள்ளைகளுடன் மனைவியைக் காணச் சென்ற திரு. பாருக்கிற்கு எல்லையில்லா ஆனந்தம்!
பிரிந்திருந்த ஈராண்டு மிகக் கடினமாக இருந்ததாகக் கூறும் அவர், நிலைமை மேம்பட்டதை எண்ணி நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.
இந்தியாவுக்குச் சென்ற இன்னொருவர் கார்த்திக்.
பெற்றோர் என்னை நீண்ட நாள் காணாததால் முகம் மாறிவிட்டதே, எடை கூடிவிட்டதே, வேறு மாதிரியாக இருக்கிறாய் என்று சொன்னார்கள்
என்றார் கார்த்திக்.
இந்தியாவில் இருக்கும் அவரது குடும்பத்தினர், 2 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரிடம் பல்வேறு மாற்றங்களைக் கண்டனர்.
10 நாள்களுக்கு மட்டுமே இந்தியாவில் இருக்கமுடிந்ததால் அவரது பெற்றோருக்குச் சற்று வருத்தம் என்று கார்த்திக் சொன்னார்.
மீண்டும் வருவேன்!
என்று ஆறுதல் சொல்லிவிட்டு அவர் இங்கு வந்திருக்கிறார்.
வெளிநாட்டில் இருக்கும் குடும்பத்தை ஈராண்டுக்குச் சந்திக்காத பலரும் நம்மிடையே இருக்கின்றனர். அவர்களது மனத்தில் ஏக்கமும் ஆவலும் இருக்கலாம்.
எல்லைகள் திறந்துவிட்டன... இனி என்ன கவலை?
முடியுமென்றால் தாமதிக்காமல் உடனே புறப்படலாமே!